Tamilசெய்திகள்

ஆபத்தான சூழலில் வெளிநாட்டில் இருக்கும் இந்தியர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் – பிரதமர் மோடி

உக்ரைன் விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்கள் கலந்து கொண்டு பேசினர்.

வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் உக்ரைனில் இந்தியர்கள் மீட்பு நடவடிக்கை மற்றும் தற்போதைய சூழல் குறித்து பாராளுமன்றத்தில் விளக்கம் அளித்தார்.

இந்நிலையில், உக்ரைன் விவகாரம் மற்றும் ஆப்பரேஷன் கங்கா மூலம் நடைபெற்ற மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்களை மீட்பு தொடர்பாக இந்தியா எடுத்த நடவடிக்கை குறித்து பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்திற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதில் பங்கேற்று விவாதத்தை ஆரோக்கியமாக மாற்றியதற்காக அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக தமது டுவிட்டர் பதிவில் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் நடைபெற்ற இந்த விவாதம் மூலம் இருதரப்பும், இந்திய வெளியுறவுக் கொள்கை விவகாரம் தொடர்பான ஆக்கப்பூர்வமான தகவல்கள் மற்றும் இரு தரப்பு நல்லிணக்கத்தை உலகிற்கு எடுத்துக் காட்டுவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

நமது சக இந்தியரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை கவனித்துக் கொள்வது நமது கூட்டுக் கடமை என்றும், ஆபத்தான சூழ்நிலைகளின் போது நமது மக்கள் எந்த பிரச்சனையையும் சந்திக்காமல் இருப்பதை உறுதி செய்ய மத்திய அரசு எந்த வாய்ப்பையும் தவற விடாது என்றும் பிரதமர் தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.