Tamilவிளையாட்டு

ஆஸ்திரேலியாவுக்கு சமமாக ஆர்.சி.பியில் விளையாட வில்லை – மேக்ஸ்வெல்லை விமர்சித்த மனோஜ் திவாரி

ஐபிஎல் தொடரின் 2024 சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கிரிக்கெட் அணி எலிமினேட்டர் போட்டியில் தோல்வியை சந்தித்து வெளியேறியது. குறிப்பாக நடப்பு சாம்பியன் சென்னையை கடைசி போட்டியில் தோற்கடித்த பெங்களூரு 4வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

அதனால் கண்டிப்பாக கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட அந்த அணி ராஜஸ்தானுக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. அந்த அணியின் இந்த தோல்விக்கு ஆஸ்திரேலிய வீரர் கிளன் மேக்ஸ்வெல் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறார். அவர் இந்த சீசனில் 10 போட்டிகளில் விளையாடி 52 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார்.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு சமமாக ஆர்சிபி அணியில் விளையாடவில்லை எனவும் அடுத்து வருடம் ஆர்சிபி அணியில் இருந்து மேக்ஸ்வெல்லை கழற்றி விட வேண்டும் எனவும் இந்திய அணியின் முன்னார் வீரர் மனோஜ் திவாரி விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

நாம் மேக்ஸ்வெல் பற்றி பேச வேண்டும். அவருக்கு சர்வதேச கிரிக்கெட்டில் ஏராளமான அனுபவம் இருக்கிறது. ஆஸ்திரேலியாவுக்காக நீங்கள் அற்புதமாக செயல்படுகிறீர்கள். ஆனால் ஐபிஎல் தொடர் என்று வரும் போது மட்டும் அவருக்கு என்ன நடக்கிறது என்பது எனக்கு தெரியவில்லை. அவருக்கு இங்கே ஆர்வமில்லாதது போல் தெரிகிறது. குறிப்பாக அவுட்டானால் அதைப்பற்றி அவர் கவலைப்படுவதாக தெரிவதில்லை. ஏனெனில் அவருடைய வங்கிக் கணக்கில் பணம் சென்று விடுகிறது.

அதனால் ஜாலியாக இருந்து சிரித்து விட்டு அவர் புகைப்படம் எடுத்துக் கொண்டு செல்வார். ஆனால் இறுதி முடிவு என்ன? நீங்கள் வெற்றிக்காக விளையாட வேண்டும். எனவே அவரை விட்டு ஆர்சிபி நகர வேண்டும். அவர்கள் தோல்வியை சந்திக்கும் போது என்ன பிரச்சனை என்பதை நாங்கள் இங்கே அமர்ந்து விவாதிக்கிறோம். ஆனால் அவர்கள் 6 வெற்றியுடன் தகுதி பெற்றதால் மகிழ்ச்சியடைந்தனர். உண்மையான முடிவு கோப்பை வெல்வதில் தான் இருக்கிறது. அது அவர்களிடம் இல்லாததால் அங்கே பிரச்சினை இருக்கிறது.

இவ்வாறு திவாரி கூறினார்.