Tamilசெய்திகள்

இன்று மாலை 4 மணிக்கு அமைச்சர் பொன்முடி ஆஜராகும்படி அமலாக்கத்துறை சம்மன்

சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் அமைந்துள்ள அமைச்சர் பொன்முடியின் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய சோதனை சுமார் 20 மணி நேரத்துக்கு பிறகு அதிகாலை 3 மணி அளவில் நிறைவடைந்தது.

இதையடுத்து, அமலாக்கத்துறை அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். அங்கிருந்த சி.ஆர்.பி.எப். போலீசாரும் புறப்பட்டுச் சென்றனர். நுங்கம்பாக்கத்தில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடியிடம் 7 மணி நேரம் நடத்திய விசாரணையும் நிறைவு பெற்றது. அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளனர்.

அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணை நிறைவடைந்த நிலையில் அமைச்சர் பொன்முடி அங்கிருந்து புறப்பட்டு வீட்டிற்குச் சென்றார். இந்நிலையில், அமைச்சர் பொன்முடி மீண்டும் இன்று மாலை 4 மணிக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது என வழக்கறிஞர் சரவணன் தெரிவித்துள்ளார்.

வழக்கறிஞர் சரவணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், அமைச்சர் பொன்முடி மீண்டும் இன்று மாலை 4 மணிக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அளித்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டு எச்சரிக்கையை மீறி பொன்முடிக்கு மன உளைச்சல் அளிக்கப்பட்டுள்ளது. கவர்னரை தொடர்ந்து எதிர்த்து வந்ததால் அமைச்சர் பொன்முடி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை அதிகாரிகளின் கேள்விகளுக்கு அமைச்சர் பொன்முடி பொறுமையாக பதிலளித்தார் என தெரிவித்தார்.