Tamilசினிமா

இயக்நர் எஸ்.ஏ.சந்திரசேகரன் நடிக்கும் ‘மோகினிப்பட்டி’

இயக்குனர் ஜெயவீரன் காமராஜ், அடிப்படையில் ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியர். ஒரு பிலிம் அகாடமியில் சினிமா சார்ந்த படிப்பை முடித்துவிட்டு இயக்குனர் எஸ் .ஏ. சந்திரசேகரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர் .இவர் மனமெங்கும் அவள் ஞாபகம், அறியாமை ,நீரின்றி அமையாது உலகு போன்ற குறும்படங்கள் மற்றும் இசை ஆல்பங்களை இயக்கியவர். இவர் தற்போது ‘மோகினிப்பட்டி’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் இயக்குனர் எஸ். ஏ. சந்திரசேகர் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார். இது ஒரு பேண்டஸி திரில்லர் படமாக உருவாகி இருக்கிறது.

இப்படம் பற்றி இயக்குனர் ஜெயவீரன் காமராஜ் பேசியதாவது, மோகினிப்பட்டி என்பது கற்பனையாக உருவாக்கப்பட்ட ஒரு கிராமம். அந்த ஊரில் ஒரு சாபம் உள்ளது. அதை அந்த ஊர்க்காரர்கள் மட்டுமே அறிவார்கள்.அதை முன்னிட்டு அவர்களிடம் ஒரு ரகசியக் கட்டுப்பாடு உள்ளது. அதன்படி அங்கு யாரும் காதலித்து திருமணம் செய்ய முடியாது.

இப்படிப்பட்ட சூழலில் அங்கு நாயகனும் நாயகியும் காதலிக்கிறார்கள். ஊர்க் கட்டுப்பாடு குறுக்கே நிற்கிறது. அவர்கள் அந்தச் சாபத்தை எப்படி எதிர்கொண்டார்கள்? அந்த ஊர்ச் சம்பிரதாயத்தை சமாளித்தார்களா? வாழ்க்கையில் ஒன்று சேர்ந்தார்களா என்பது தான் படத்தின் கதை. இந்தக் காலத்தில் இப்படி ஒரு கதையா என்று நினைக்கலாம். ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் ஊருக்குள்ளும் பிறருக்குத் தெரியாத ரகசியங்கள் மறைந்து கொண்டுள்ளன. அப்படி ஒரு ரகசியத்தை வைத்துதான் இப்படி ஒரு படமாக உருவாக்கி இருக்கிறோம்.

இந்தப் படத்திற்கான கதையை எழுதி அதில் ஒரு பாத்திரத்திற்கு எஸ்.ஏ. சந்திரசேகரை நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். அவர் நடிப்பாரா என்ற சந்தேகமும் தயக்கமும் எனக்கு இருந்தது. அப்படி ஒரு தயக்கத்தோடு தான் அவரிடம் நான் கதை சொன்னேன். அவர் கதை பிடித்து, அந்தப் பாத்திரமும் பிடித்து ஓகே சொல்லி விட்டார். அவர் இந்தப் படத்திற்கு உள்ளே வந்த பிறகு வேலைகள் மளமளவென ஆரம்பித்தன. ஆனால் அவரை நடிக்க வைக்கும் போது எனக்குப் பதற்றம் இருந்தது.

நாம் உயரத்தில் வைத்து இயக்குனராகப் பார்த்த ஒருவரை வைத்து நாம் எப்படி இயக்குவது என்று தயக்கம் எனக்கு இருந்தது. ஆனால் அதை எல்லாம் சகஜம் ஆக்கிவிட்டு அவர் நடித்துக் கொடுத்துவிட்டார். சில காட்சிகளில் எனக்குத் திருப்தி ஏற்பட்ட போது கூட மேலும் சிறப்பாக அடுத்த ஷாட்டில் நடித்துக் கொடுத்து அந்தப் பாத்திரத்தினை மேலும் உயரத்திற்குக் கொண்டு சென்று விட்டார் .அந்த வகையில் அவரை நடிக்க வைத்த அனுபவம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இதன் படப்பிடிப்பு திருச்சி பகுதியில் நடைபெற்றது. வெப்மூவிக்கான படைப்பு சுதந்திரத்தோடு இது உருவாக்கப்பட்டுள்ளது. சுமார் ஒன்றரை மணி நேரம் ஓடக்கூடிய இந்த படம் ஒரு நிமிடம் கூட போர் அடிக்காமல் விறுவிறுப்பாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.