Tamilசெய்திகள்

ஐ.நா சபையில் பிரதமர் மோடி தலைமையில் யோகா நிகழ்ச்சி – கின்னஸ் சாதனை படைத்தது

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, ஐ.நா. சபை வளாகத்தில் உள்ள புல்வெளியில் நேற்று பிரமாண்ட யோகாசன நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்கிக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார்.

இந்நிகழ்ச்சியில் ஐ.நா. உயர் அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் 180க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வந்திருந்த தூதர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு யோகாசனம் செய்தனர். மேடையில் யோகா கலைஞர்கள் யோகாசனங்களை செய்ய, புல்வெளியில் அமர்ந்து பிரதமர் மோடி உள்ளிட்ட அனைவரும் யோகாசனம் செய்து பிரமிக்க வைத்தனர்.

இந்த யோகாசன நிகழ்ச்சியானது, கின்னஸ் சாதனை படைத்துள்ளது. அதிக நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்ற யோகா நிகழ்ச்சி என்ற உலக சாதனையை படைத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக யோகா நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, வருகை தந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். உங்கள் அனைவரையும் பார்த்ததில் மகிழ்ச்சி அடைகிறேன் என கூறிய மோடி, ஏறக்குறைய ஒவ்வொரு நாட்டைச் சேர்ந்தவர்களும் இன்று இங்கே வந்திருப்பதை பார்க்க முடிகிறது, என்றார்.