Tamilசெய்திகள்

ஒப்படைப்பு தொடர்பான இருநாட்டு ஒப்பந்தம் இல்லை – இந்தியாவின் வேண்டுகோளுக்கு பாகிஸ்தான் பதில்

2008-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந்தேதி திடீரென மும்பைக்குள் புகுந்த தீவிரவாதிகள் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தினர். பிரபல தாஜ் ஓட்டல் உள்ளிட்ட முக்கியமான இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் 175 பேர் உயிரிழந்தனர். 300-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இந்த தாக்குதலில் 9 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். அஜ்மல் கசாப் உயிருடன் பிடிபட்டார். மத்திய அமைப்புகள் தீவிர விசாரணை மேற்கொண்டதில் இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் ஹபீஸ் சயீத் எனத் தெரியவந்தது. சயீத் பாகிஸ்தானில் இருந்து வருவதாகவும், அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. ஆனால், ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் இல்லை என பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வந்தது. ஐ.நா. சபையில் இந்தியா ஆதாரத்துடன் பாகிஸ்தான் மீது குற்றம்சாட்டியது. இருந்த போதிலும் பாகிஸ்தான் அவரை பாதுகாத்து வருகிறது.

இந்த நிலையில்தான் ஹபீஸ் சயீத்தை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என இந்தியா பாகிஸ்தான் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொட்பானர் மும்தாஜ் ஜஹ்ரா பலோச் கூறுகையில் “இந்திய அதிகாரிகளிடம் இருந்து வேண்டுகோள் வந்துள்ளது. அதை பாகிஸ்தான் பெற்றுள்ளது. பண மோசடி வழக்கில் ஹபீஷ் சயீத்தை நாடு கடத்த வேண்டும் (இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும்) என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் பாகிஸ்தான்- இந்தியா இடையே ஒப்படைப்பு தொடர்பான இருநாட்டு ஒப்பந்தம் இல்லை” என்றார்.

இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட வழக்கை எதிர்கொண்டு வரும் ஹபீஸ் சயீத்தை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என பாகிஸ்தானுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ள என இந்திய வெளியுறவுத்தறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

லஷ்கர்-இ-தொய்பா (Let) பயங்கரவாத குழுவின் நிறுவனரான ஹபீஸ் சயீத்தை ஐ.நா., தடைசெய்யப்பட்ட பயங்கரவாதி என அறிவித்தது.