Tamilவிளையாட்டு

ஒரு ரன் அடிக்க திணறுகிறார்கள் – இந்திய இளம் கிரிக்கெட் வீரர்களை விமர்சித்த கவுதம் காம்பீர்

இந்தியா – நியூசிலாந்து அணிகள் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டியில் இந்திய அணி நியூசிலாந்திடம் தோல்வியை தழுவியது. நியூசிலாந்து அணிக்கு எதிராக 2-வது டி20 கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது.

முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 99 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணியின் தரப்பில் அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளை எடுத்தார். இதையடுத்து 100 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. 19.5-வது ஓவரில் இந்திய அணி 101 ரன்கள் எடுத்து நியூசிலாந்தை வென்றது. சூர்ய குமார் யாதவ் 26 ரன்களுடனும், ஹர்திக் பாண்ட்யா 15 ரன்னுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இந்த போட்டியில் எந்த பேட்ஸ்மேனும் ஒரு சிக்சர் கூட அடிக்கவில்லை. இது டி20 போட்டிக்கு தயார் செய்யப்பட்ட பிட்ச் இல்லை என இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்தார். இந்நிலையில் ஒரு ரன் எடுக்க இளம் வீரர்கள் ரொம்ப கஷ்படுகிறார்கள் என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

இது தரக்குறைவான ஆடுகளம் என்பதை நாம் அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டும். சுழற் பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் இந்தியாவின் நம்பர் ஒன் டி20 பந்துவீச்சாளரான சாகலை இரண்டு ஓவர் மட்டுமே ஹர்திக் பாண்டியா பயன்படுத்தியது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இது ஹர்திக் பாண்டியா செய்த தவறாக பார்க்கிறேன். காரணம் இரண்டு ஓவரில் அவர் நான்கு ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை எடுத்திருக்கிறார்.

ஆடுகளத்தை பொறுத்தவரை இது மோசமாக இருந்தாலும், கிரிக்கெட் வீரராக நீங்கள் அதை சவாலாக எடுத்துக் கொண்டு விளையாடி இருக்க வேண்டும். இப்போது உள்ள தலைமுறை வீரர்கள் வலைப் பயிற்சியின் போது சுழற் பந்துவீச்சாளர்களை எப்படி சிக்சர் அடிக்கலாம் என்று மட்டுமே பயிற்சி எடுத்து வருகிறார்கள். அதுதான் திறமை என்று நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் சுழற் பந்துவீச்சை எப்படி சமாளித்து ஆட்டம் இழக்காமல் விளையாட வேண்டும் என்பது குறித்து யாரும் யோசிப்பதில்லை.

என்னைக் கேட்டால் அதுதான் உண்மையான திறமை. வலைப்பயிற்சியில் சுழற்பந்துவீச்சாளர்களை எப்படி எதிர்கொண்டு சிங்கிள் எடுக்க வேண்டும் என்பது குறித்தும் இளம் வீரர்கள் பயிற்சி எடுக்க வேண்டும். பந்துகளை வீணடிக்காமல் சிங்கிள்ஸ் அடித்து விளையாடியிருந்தால் இந்திய அணி முன்கூட்டியே வெற்றி பெற்று இருக்கலாம்.

என்று கம்பீர் கூறியுள்ளார்.