Tamilசெய்திகள்

ஓணம் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

ஓணம் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் வரும் 29ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் சார்பில் செய்தி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த செய்தி அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஓணம் பண்டிகை தினத்தினை முன்னிட்டு 29.08.2023 (செவ்வாய் கிழமை) அன்று கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது.

29.08.2023 அன்று அறிவிக்கப்பட உள்ள உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக செப்டம்பர் திங்கள் நான்காவது சனிக்கிழமை (23.09.2023) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கும் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வேலை நாளாக இருக்கும்.

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஓணம் பண்டிகை தினத்திற்கு உள்ளூர் விடுமுறை செலவாணி முறிச் சட்டம் 1881-ன் படி அறிவிக்கப்படவில்லை என்பதால் 29.08.2023 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு, தேவையான பணியாளர்களைக் கொண்டு இயங்கும் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அவர்களால் உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.