Tamilசெய்திகள்

கடவுள் மீது கோபம் இல்லை – ஆ.ராசா பேச்சு

இந்து மதம் பற்றி எதாவது பேசி அடிக்கடி சர்ச்சையில் சிக்குபவர் தி.மு.க. துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி.. சமீபத்தில் கூட இந்து கடவுளான ராமர் பற்றி பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார். நாங்கள் ஒருபோதும் ரா மரை ஏற்க மாட்டோம், ராமருக்கு நாங்கள் எதிரி. இதை எங்கு வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள் என பேசி இருந்தார்.

ஆ.ராசாவின் இந்த பேச்சு பா.ஜ.க.வினரை மட்டுமல்லாமல், தி.மு.க. கூட்டணி வகிக்கும் காங்கிரசையும் அதிர்ச்சி அடையச் செய்தது. இதுதொடர்பாக காங்கிரசாரே ஆ.ராசாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் ஆ.ராசா எம்.பி. நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடுகிறார். நேற்று முன்தினம் குன்னூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஆ.ராசா எம்.பி. பேசினார். அப்போது ஆன்மீகம் பற்றிய பேசிய அவரது பேச்சுகள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

கூட்டத்தில் ஆ.ராசா பேசியதாவது:-

என் மனைவி சனிக்கிழமை ராமர் கோவிலில் கும்பிட்டதுடன், வியாழன் எனக்காகவும், திங்கள் சிவனுக்காகவும், 3 நாட்கள் விரதம் இருந்தார். அவரது பூஜை அறை இன்றும் இருக்கிறது. நான் ஒருநாளும் உள்ளே சென்றது இல்லை. அந்த அம்மாவிற்கு நம்பிக்கை இருந்தாலும் எனக்கு நம்பிக்கை இல்லை. இங்குள்ள எல்லோருக்கும் நம்பிக்கை இருக்கிறது. நம்பிக்கை இருப்போர் கடவுளை கும்பிடட்டும். அதில் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை.

பக்தி என்பது தனிமனித தேவைக்காக தான். என் ஆன்மாவை சுத்தப்படுத்த ஒரு கடவுள் இருந்தால் இருந்து விட்டு போகட்டும். கள்ளம் இல்லாத உள்ளம் தான் கடவுள் என்று சொல். ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம். கடவுள் மீது கோபம் இல்லை. கும்பிட்டு விட்டுபோ.

இவ்வாறு அவர் கூறினார்.