Tamilசெய்திகள்

கப்பலை சிறைபிடிக்க உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம்

கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த நந்தக்குமார் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், சென்னையை சேர்ந்த புரவலான் கப்பல் போக்குவரத்து நிறுவனத்திற்கு சொந்தமான சரக்கு கப்பல் எம்.வி. புரவலானி தற்போது எம்.வி. ரகிமா என்ற பெயரில் இயங்கி வருகிறது.

இந்த கப்பலில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஆயில் சரி பார்ப்பவராக ஒப்பந்த அடிப்படையில் நான் பணியில் சேர்ந்தேன். 9 மாதங்களுக்கு தலா மாதம் ரூ.30 ஆயிரத்து 842 சம்பளம் என ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால் பணியில் சேர்ந்தது முதல் கடந்த 13 மாதங்களாக எனக்கு ஊதியம் வழங்கவில்லை. முன் தொகையாக ரூ.50 ஆயிரம் மட்டுமே வழங்கி உள்ளனர்.

எனவே எனக்கு ஊதியம் மற்றும் இழப்பீட்டு தொகையுடன் ரூ.4.48 லட்சம் தர வேண்டி உள்ளது. அதனை வழங்க கப்பல் நிறுவத்திற்கு உத்தரவிட வேண்டும். நிலுவையில் உள்ள சம்பளம் குறித்து பலமுறை கப்பல் நிறுவனத்திற்கு தகவல் அனுப்பியும் இதுவரை முறையான பதில் அளிக்கவில்லை. எனவே அதனை சிறை பிடிக்க வேண்டும் என கேட்டிருந்தார். இந்த மனு சென்னை ஐகோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் முத்துசாமி ஆஜராகி தற்போது எம்.வி. ரகிமா கப்பல் மாலத்தீவில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதுவரை மனுதாரருக்கு வழங்க வேண்டிய ஊதிய தொகையை சென்னை தனியார் கப்பல் நிறுவனம் வழங்காமல் இழுத்தடித்து வருகிறது. எனவே அதனை சிறைபிடித்து மனுதாரருக்கு உரிய இழப்பீட்டு தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாதிட்டார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி அப்துல் குத்துஸ், தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள எம்.வி. ரகிமா கப்பலை சிறைபிடிக்க உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கின் விசாரணையை வருகிற 13-ந்தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.