Tamilசெய்திகள்

காங்கிரஸுக்கு வாக்களித்தால் கடவுள் உங்களை நரகத்திற்கு அழைத்துச் செல்வார் – பா.ஜ.க எம்.பி சர்ச்சை பேச்சு

தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் தொகுதி பா.ஜ.க. எம்.பி. அரவிந்த் கட்சியின் யாத்திரையில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

பிரதமர் மோடி மக்கள் ஆரோக்கியத்தை கவனித்து வருகிறார். இலவச உணவு, இலவச கியாஸ், நல்ல பள்ளிகள் அமைக்கப்படுகின்றன. திருமணத்திற்கு பணம் அனுப்புகிறார். சுய உதவி குழுக்களுக்கு கடன் கொடுக்கிறார். நரேந்திர மோடி தான் முத்தலாக்கை ரத்து செய்து சுயமரியாதையை உறுதி செய்துள்ளார்.

தங்களுக்கு உணவளிக்கும் கையை மக்கள் கடிக்க வேண்டாம். பா.ஜ.க.வுக்கு வாக்களிக்காமல் காங்கிரஸ் கட்சி அல்லது பி.ஆர்.எஸ். கட்சிக்கு நீங்கள் வாக்களித்தால் கடவுள் உங்களை நரகத்திற்கு அழைத்துச் செல்வார். நீங்கள் சொர்க்கத்திற்கு போக மாட்டீர்கள். நரகத்திற்கு போவீர்கள் என்று நான் சொல்கிறேன்.

சொர்க்கத்திற்கு செல்ல விரும்பினால் நாட்டிற்கு சேவை செய்து அதை பாதுகாப்பவர்களுக்கு ஆதரவளித்து பா.ஜ.க.வுக்கு வாக்களிக்க வேண்டும். இல்லையென்றால் கடவுளும் உங்களை மன்னிக்க மாட்டார்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த சர்ச்சை பேச்சு வீடியோ தெலுங்கானா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.