Tamilசெய்திகள்

காவிரி வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது

காவிரி நீர் விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் மனுவை முறையீட்டு பட்டியலில் இணைப்பது தொடர்பாக பதிவாளரிடம் கோரிக்கை வைக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை டெல்லியில் நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதம் 9-ந்தேதி வரை கர்நாடகம் காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய 51 டி.எம்.சி நீரில் 15 டி.எம்.சி மட்டுமே தந்திருப்பதால் எஞ்சியுள்ள 38 டி.எம்.சி நீரை உடனடியாக திறக்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆனால் வினாடிக்கு 10,000 கன அடி வீதம் 15 நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் திறக்க கர்நாடகத்திற்கு உத்தரவிட்டது மேலாண்மை ஆணையம். நமக்கு தரவேண்டிய தண்ணீரை திறந்து விட மறுக்கப்பட்டதால் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது தமிழ்நாடு அரசு. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பின் படி உரிய நீரை திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று தனது மனுவில் கூறியுள்ளது. தமிழ்நாடு அரசு 113 பக்கங்களை கொண்ட விரிவான மனுவில் கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு திறந்து விட வேண்டிய நீரில் சுமார் 29 டி.எம்.சி தண்ணீரை இன்னும் கர்நாடகம் திறந்து விட வேண்டும்.

அதேபோல ஆகஸ்டு மாதத்தில் கர்நாடகம் 45 டி.எம்.சி நீர் தர வேண்டும். எனவே தமிழக அரசு காவிரி டெல்டா பாசன பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்களை காப்பாற்ற உடனடியாக வினாடிக்கு 24,000 கனஅடி வீதம் தண்ணீர் இந்த மாதம் முழுவதும் காவிரியில் திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும். அதேபோன்று செப்டம்பர் மாதம் திறக்க வேண்டிய 36.76 டி.எம்.சி நீரையும் காலதாமதமில்லாமல் உரிய நேரத்தில் திறந்து விடவும் கர்நாடகத்துக்கு உத்தரவிட வேண்டும்.

மேலும், காவிரி நீர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் உரிய நீரை திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு மனுவில் வலியுறுத்தி இருந்தது.

இந்நிலையில் இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில் தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி முறையீடு செய்தார். அதற்கு தலைமை நீதிபதி, வழக்குகளை விரைந்து விசாரிப்பதற்கான முறையீட்டுக்கான பட்டியலில் இந்த வழக்கு இணைக்கப்படாமல் உள்ள நிலையில் தங்களது முறையீட்டை எவ்வாறு ஏற்பது? என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினர். மேலும், காவிரி நீர் தொடர்பான வழக்கை முதலில் முறையீட்டு பட்டியலில் இணைக்க பதிவாளரிடம் கோரிக்கை வைக்கவும் அறிவுறுத்தினார்.