Tamilசெய்திகள்

கெஜ்ரிவால் செய்வது அனைத்தும் பா.ஜ.கவுக்காக தான் – காங்கிரஸ் தலைவர் அஜய் மக்கான் தாக்கு

காங்கிரஸ்- ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையில் மோதல் அதிகரித்து வரும் நிலையில், பா.ஜனதாவுக்கு உதவி செய்வதற்காகவே எங்களை எதிர்த்து வருவதோடு, எதிர்க்கட்சிகள் பத்திரிகையாளர் சந்திப்பை ஆம் ஆத்மி கட்சி புறக்கணித்துள்ளது என்று காங்கிரஸ் கட்சி தலைவர் அஜய் மக்கான் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அஜய் மக்கான் கூறுகையில் ”நீங்கள் மிகப்பெரிய ஊழல் செய்து, அதன் மூலம் பெறப்பட்ட பணத்தை, காங்கிரசுக்கு எதிராக கோவா, குஜராத், பஞ்சாப், இமாசல பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் அசாமில் சதிவேலையில் ஈடுபடுத்தியுள்ளீர்கள். உங்களுடைய செயல்கள் கவனிக்கப்படாமல் இல்லை என்பது உறுதி. இதெல்லாம் பா.ஜனதாவுக்கு உதவுவதற்காகத்தான்.

ஒரு பக்கம் காங்கிரஸ் கட்சியின் ஆதரவை கேட்கிறார் கெஜ்ரிவால். எனினும் மற்றொரு பக்கம் ராஜஸ்தானில் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட், சச்சின் பைலட் போன்ற தலைவர்களுக்கு எதிராக பேசி வருகிறார். எங்களுடன் கைக்கோர்க்க விரும்கிறாரா? அல்லது விலகி நிற்க விரும்புகிறாரா? தற்போது கெஜ்ரிவால் தெரிவித்து வருவது ஒன்றும் புதிதல்ல.

அனைத்துக்கட்சி கூட்டத்தில் கூட எங்களுக்கு எதிரான அறிக்கையை கொடுத்தார்கள். விசயம் என்னவென்றால், கெஜ்ரிவால் ஊழலில் ஈடுபட்டிருந்த போதிலும், ஜெயிலுக்கு செல்ல விரும்பவில்லை. அதற்கான எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அவர் கட்சியின் இரண்டு பேர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். எதிர்க்கட்சி கூட்டத்தில் கெஜ்ரிவால் இருப்பது ஒற்றுமைக்காக அல்ல, ஒற்றுமையை சீர்குலைப்பதற்காக. ஒற்றுமையை குலைக்கும் நோக்கத்துடன் அங்கு சென்றார்” என்றார்.