Tamilசெய்திகள்

சகோதரனை காப்பாற்ற சமூக வலைதளம் மூலம் ரூ.46 கோடி நிதி திரட்டி சிறுமி உயிரிழந்தார்

கேரள மாநிலம் கண்ணூரை அடுத்த மாட்டூல் பகுதியை சேர்ந்தவர் அப்ரா (வயது 16). இவருக்கு எஸ்.எம்.ஏ. எனப்படும் ஸ்பைனல் தசை சிதைவு நோய் பாதிப்பு ஏற்பட்டது. இந்த நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அப்ராவின் சகோதரர் முகமதுவுக்கும் உடல் நலக்கோளாறு ஏற்பட்டது. அவரையும் பரிசோதித்த டாக்டர்கள், அவருக்கும் அப்ராவுக்கு ஏற்பட்டுள்ள அதே ஸ்பைனல் தசை சிதைவு நோய் ஏற்பட்டிருப்பதாக கூறினர். அப்ராவின் சகோதரருக்கு ஏற்பட்டுள்ள அரிய வகை நோயை குணப்படுத்த வேண்டுமானால் அதற்குரிய மருந்துக்கு பல லட்சம் செலவிட வேண்டும் எனக்கூறினர்.

குறிப்பாக ஒரு டோஸ் மருந்துக்கு மட்டும் ரூ.18 கோடி வரை செலவாகும் என தெரிவித்தனர். சமூக வலைதளம் மூலம் ரூ.46 கோடி திரட்டினார் இதனை கேட்டதும் சிறுமி அப்ரா தளர்ந்து விடவில்லை. தனது சகோதரனை காப்பாற்ற சமூக வலைதளங்களில் வேண்டுகோள் விடுத்தார். அவருக்கும் அதே நோய் பாதிப்பு இருந்த போதிலும் தனது சகோதரனை காப்பாற்ற அனைவரும் உதவுங்கள் என்று உருக்கமாக கேட்டுக்கொண்டார்.

சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி சிறுமி அப்ரா விடுத்த வேண்டுகோள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. பொதுமக்கள் பலரும் அப்ராவுக்கு உதவ முன்வந்தனர். வெளிநாடுகளில் இருந்தும் பலர் உதவி கரம் நீட்டினர். இதன் காரணமாக அவருக்கு குறுகிய காலத்திலேயே சுமார் ரூ.46 கோடி பணம் கிடைத்தது.

இந்த பணத்தின் மூலம் அப்ராவின் சகோதரருக்கு கோழிக்கோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதே ஆஸ்பத்திரியில் அப்ராவும் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று காலை அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். சகோதரன் உயிரை காப்பாற்ற உருக்கமான வேண்டுகோள் விடுத்து பணம் திரட்டிய அப்ரா, அதே நோய்க்கு பலியான சம்பவம் அவருக்கு உதவி செய்த மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.