Tamilசெய்திகள்

பறிக்கப்பட்ட அரசு ஊழியர்களின் சலுகைகளை மீண்டும் வழங்க வேண்டும் – சசிகலா அறிக்கை

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் என்ற பெயரில் சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களின் நலனை கருத்தில் கொண்டு கடந்த ஜனவரி 1-ந்தேதி முதல் 3 சதவீத அகவிலைப்படி உயர்வினை முன் தேதியிட்டு அறிவித்து நிலுவை தொகையினை உடனே வழங்கிட வேண்டும். கடந்த ஜனவரி 1-ந்தேதி முதல் 3 சதவீத அகவிலைப்படி உயர்வினை மத்திய அரசு மார்ச் மாத இறுதியிலேயே வழங்கிவிட்டது. இந்த நிலையில் தமிழக அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய அக விலைப்படி உயர்வு பற்றி சிந்திக்க கூட மனமின்றி 4 மாதங்களாக தி.மு.க. அரசு காலம் கடத்தி வருகிறது.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சி காலங்களில் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக தமிழக அரசு ஊழியர்களும் அகவிலைப் படியினை பெற்று வந்துள்ளனர். கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அரசு ஊழியர்களின் பாதுகாவலன் என விளம்பரம் செய்துகொண்டு தி.மு.க. பல வாக்குறுதிகளை அரசு ஊழியர்களுக்கு அளித்து ஆட்சியை பிடித்தது.

ஆட்சி கட்டிலில் அமர்ந்தவுடன் அரசு ஊழியர்களுக்கு அளித்து வந்த அகவிலைப்படியை முடக்கிவிட்டது. அதே போன்று அரசு ஊழியர்கள் தாங்கள் ஈட்டிய விடுப் பினை ஒப்படைத்து பணம் பெறும் சலுகையினையும் பறித்துள்ளது. தி.மு.க. அரசு பதவி ஏற்ற நாள் முதல் தமிழக அரசு ஊழியர்களுக்கு தர வேண்டிய அகவிலைப் படியை நிலுவைத்தொகையின்றி பின் தேதியிட்டு வழங்கி அரசு ஊழியர்களுக்கு துரோகத்தை இழைத்து வருவதை தமிழக அரசு ஊழியர்கள் இனியும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்.

அரசு ஊழியர்கள் தான் அரசின் அச்சாணி என்பதை ஒரு கணம் சிந்தித்து பார்த்து தமிழக அரசு ஊழியர்களின் பிற முக்கிய கோரிக்கைகளையும் சட்டசபை தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளையும் கருத்தில் கொண்டு விரைவாக நிறைவேற்றுவதுடன் பறிக்கப்பட்ட சலுகைகளையும் மீண்டும் அளிக்குமாறு தி.மு.க. அரசை கேட்டுக் கொள்கிறேன். இவை அனைத்திற்கும் மேலாக தி.மு.க.வினரின் அராஜகங்கள், அத்துமீறல்களுக்கு மத்தியிலும் தமிழக அரசு ஊழியர்கள் ஒவ்வொரு நாளும் தங்கள் அன்றாட பணிகளை மேற் கொள்வது மிகுந்த சிரமமாக இருப்பதாக சொல்லி வேதனைப்படுகிறார்கள்.

இதற்காகவே தி.மு.க. அரசு தமிழக அரசு ஊழியர்களுக்கு கூடுதலாக அகவிலைப்படி உயர்வு அளிக்க முன்வர வேண்டும். எனவே தி.மு.க.வினர் இனியும் காலதாமதம் செய்யாது தமிழக அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களின் நலனை கருத்தில் கொண்டு கடந்த ஜனவரி 1-ந்தேதி முதல் 3 சதவீத அகவிலைப்படி உயர்வினை முன் தேதியிட்டு அறிவித்து நிலுவை தொகையினை உடனே வழங்கிடுமாறு தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.