Tamilசெய்திகள்

சம்பா நெற்பயிரை காப்பீடு செய்வதற்காக கால அவகாசம் நீட்டிப்பு

வெள்ளம், புயல், வறட்சி, பூச்சி நோய் தாக்குதல் போன்ற இயற்கை இடர்பாடுகளால் நெற்பயிரில் மகசூல் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால், இழப்பினை தவிர்த்திட பயிர் காப்பீடு செய்ய வேளாண்மைத்துறை அறிவுறுத்தியுள்ளது.

பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் 2022-23-ம் ஆண்டு சம்பா, தாளடி, பிசான பருவ பயிர்களுக்கான காப்பீடு கடந்த செப்டம்பர் 15-ம் தேதி பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் தொடங்கப்பட்டது. இதுவரை 11 லட்சம் விவசாயிகளால் 15.95 லட்சம் ஏக்கர் பரப்பளவு காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வடகிழக்கு பருவமழை பெய்துவரும் நிலையில் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி, திருப்பூர், ஈரோடு, திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் நெற்பயிருக்கு காப்பீடு செய்வதற்கான அவகாசம் கடந்த நவம்பர் 15-ம் தேதியுடன் முடிவடைந்தது.

நெற்பயிருக்கு காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், சம்பா நெற்பயிரை காப்பீடு செய்வதற்காக நவம்பர் 21-ம் தேதி வரை கால அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது. பயீர் காப்பீடு செய்ய நாளை, நாளை மறுநாள் வங்கிகள், வேளாண் கூட்டுறவு சங்கங்கள் செயல்படவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்பட 27 மாவட்ட விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து கொள்ளவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.