Tamilசெய்திகள்

சென்னை கடற்படைக்கு சொந்தமான வாகனம் இருசக்கர வாகனத்தில் மோதி விபத்து – கர்ப்பிணி பெண் பலி

சென்னை காமராஜர் சாலையில் கலங்கரை விளக்கத்தில் இருந்து தலைமைச் செயலகம் செல்லும் பிரதான சாலையில் இந்திய கடற்படைக்கு சொந்தமான வாகனம் ஒன்று இருசக்கர வாகனத்தின்மீது மோதி விபத்து ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் இருசக்கர வாகனத்தில் கணவரின் பின்னால் அமர்ந்து இருந்த 8 மாதம் நிறைந்த கர்ப்பிணி லதா என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

விபத்து ஏற்படுத்திவிட்டு வாகனத்தை நிறுத்தாமல் சென்ற ஓட்டுநரை, அங்கிருந்த பொதுமக்கள் விரட்டிச்சென்று பிடித்தனர். கோபமடைந்த பொதுமக்கள் கடற்படை வாகனத்தை சேதப்படுத்தினர். தகவலறிந்து விரைந்து வந்த சிந்தாதிரிப்பேட்டை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் கர்ப்பிணியின் உடலைக் கைப்பற்றி ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.