Tamilசெய்திகள்

சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 3 ஆயிரம் தெருக்களில் புதிய பெயர் பலகைகள் பொருத்த முடிவு

சென்னை நகரில் போக்குவரத்து சந்திப்புகள் மற்றும் தெருமுனைகளில் வைக்கப்பட்டுள்ள வழிகாட்டி பலகைகள் சாலைகளில் பயணிப்பவர்களுக்கு மிகவும் உதவியாக உள்ளன. ஆனால் பல இடங்களில் இந்த வழிகாட்டி பெயர் பலகைகள் சேதம் அடைந்து அல்லது மங்கலாக காட்சி அளிக்கிறது. இதனால் செல்ல வேண்டிய இடம் தெரியாமல் பயணிகள் தவிக்கும் நிலை உள்ளது.

சில இடங்களில் மழை நீர் வடிகால் கட்டுமானத்திற்காக பலகைகள் அகற்றப்பட்டு மீண்டும் வைக்கப்படாமல் உள்ளன. சில பலகைகள் சேதமடைந்து கவிழ்ந்து கிடக்கின்றன. வழிகாட்டி பெயர் பலகைகளின் மேற்பரப்பில் மீண்டும் மீண்டும் சுவரொட்டி ஒட்டுவதால் அவை அடையாளம் தெரியாமல் காட்சி அளிக்கின்றன.

மேலும் சில பெயர் பலகைகளில் சில எழுத்துக்கள் மட்டுமே தெரியும் வகையில் உள்ளது. பல இடங்களில் தெரு முனைகளில் வியாபாரம் செய்யும் வியாபாரிகள் பெயர் பலகை தெரியாமல் மறைத்து விடுகின்றனர். இந்த நிலையில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் இது போன்ற பெயர் பலகைகளை மாற்றி புதிய பெயர் பலகை வைக்கும் முயற்சியில் சென்னை மாநகராட்சி இறங்கியுள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

சென்னையில் 30 ஆயிரம் தெருக்களில் சேதமடைந்த பெயர் பலகைகள் அகற்றப்பட்டு புதிய பெயர் பலகைகள் வைக்கப்பட உள்ளன. கடந்த ஆண்டு ரூ.8.7 கோடி செலவில் 8 ஆயிரம் பெயர் பலகைகள் மாற்றப்பட்டு உள்ளன. மீதமுள்ள பெயர் பலகைகளை மாற்றும் பணி படிப்படியாக நடைபெறும்.

புதிய பெயர் பலகைகள் ஆடம்பரமாக சிங்கார சென்னை 2.0 லோகோவுடன் காணப்படும். இரவிலும் பெயர் தெளிவாக தெரியும் வகையில் முப்பரிமாண தோற்றத்துடன் இவை தயாரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு பெயர் பலகையின் விலையும் ரூ.4,500 ஆகும். அவை டிஜிட்டல் முறையில் அச்சிடப்படுவதால் 8 முதல் 10 ஆண்டுகள் வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படு கிறது. பழைய பெயர் பலகைகளை விட இது தரமானது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.