Tamilசெய்திகள்

செந்தில் பாலாஜியின் குடும்பத்தினர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை – அமலாக்கத்துறை குற்றச்சாட்டு

போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி பணம் வாங்கிய குற்றச்சாட்டில் சட்ட விரோத பணபரிமாற்றம் நடைபெற்றிருப்பதாக கூறி அமலாக்கத்துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஜூன் 14-ந்தேதி கைது செய்தனர். இந்த வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கடந்த 7-ந்தேதி காவலில் எடுத்தனர். நேற்று 4-வது நாளாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த விசாரணையின் போது இதுவரை 300-க்கும் மேற்பட்ட கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டு உள்ளன. இன்று 5-வது நாளாக விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் நாளையுடன் அமலாக்கத்துறை காவல் முடிவடைகிறது. இதையடுத்து செந்தில் பாலாஜி நாளை மாலை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் மீண்டும் அடைக்கப்பட உள்ளார்.

இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை சார்பில் நேற்று மாலையில் செய்தி குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

போக்குவரத்து கழகத்தில் வேலைக்கு சேர்க்கப்பட்ட வழக்கில் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார், அவரது உதவியாளர்கள் சண்முகம், கார்த்திகேயன் ஆகியோரும் முக்கிய எதிரிகள் ஆவர். இவர்கள் பணம் வாங்கிக் கொண்டு தகுதி இல்லாதவர்களை வேலைக்கு சேர்த்துள்ளனர். இதன் மூலம் தகுதியான நபர்கள் நிராகரிக்கப்பட்டுள்ளனர்.

செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் தனது மனைவி நிர்மலா பெயரில் 2.39 ஏக்கரில் வீடு கட்டி வருகிறார். இந்த இடத்தை அவரது மாமியார் லட்சுமி வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது. அனுராதா ரமேஷ் என்பவரிடமிருந்து ரூ.10 லட்சத்துக்கு இடம் வாங்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இது கற்பனை கதையாகும். இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் ரூ.10 லட்சத்துக்கு இடத்தை வாங்கியதாக காட்டிவிட்டு மீதி தொகையை ரொக்கமாக அனுராதா ரமேசுக்கு வழங்கி இருப்பதும் தெரியவந்துள்ளது. அந்த பணத்தை வைத்து அனுராதா ரமேஷ் வேறு ஒரு இடத்தில் நிலம் வாங்கியுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு அசோக்குமார், நிர்மலா, லட்சுமி ஆகியோருக்கு பலமுறை சம்மன் செய்யப்பட்டுள்ளது.

ஆனால் அவர்கள் விசாரணைக்கு ஆஜராகவில்லை. அமலாக்கத்துறை விசாரணைக்கு அவர்கள் ஒத்துழைப்பு தர மறுக்கின்றனர்.

இவ்வாறு பரபரப்பான குற்றச்சாட்டுகளை அமலாக்கத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் 3 பேரிடமும் விசாரணை நடத்த அடுத்த கட்டமாக என்ன செய்யலாம் என்து பற்றி அமலாக்கத்துறையினர் ஆலோசித்து வருகிறார்கள்.