Tamilசெய்திகள்

செந்தில் பாலாஜியின் கைது சட்டப்படியானது – ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். செந்தில் பாலாஜி கைது நடவடிக்கைக்கு எதிராக அவரது மனைவி மேகலா சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதாக அவரது மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரணைக்கு நீதிபதி நிஷா பானு ஏற்றார். ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல, நீதிமன்ற காவல் சட்டவிரோதமில்லை, மருத்துவமனையில் உள்ள நாட்கள் நீதிமன்ற காவல் காலமாக கருதப்படாது. மருத்துவ ரீதியாக தகுதி பெற்ற பின் உரிய நீதிமன்ற அனுமதி பெற்று செந்தில் பாலாஜியிடம் விசாரிக்கலாம் என நீதிபதி பரத சக்கரவர்த்தி கூறினார். இதையடுத்து 3-வது நீதிபதியாக சி.வி. கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார்.

கடந்த 11-ந்தேதி முதல் 3-வது நீதிபதி முன்பு வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. 3-வது நாளாக இன்று வாதம் நடைபெற்றது. அப்போது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் கூறியதாவது:-

நீதிமன்றத்தில் புகார் தாக்கல் செய்யும் வரை புலன் விசாரணை தொடரலாம். அமர்வு நீதிமன்றம் அனைத்து தரப்பு வாதங்களை கேட்டபின் உத்தரவு பிறப்பித்துள்ளது. நீதிபதி பரத சக்கரவர்த்தி தீர்ப்பில் உடன்படுகிறேன்.

அமலாக்கத்துறைக்கு காவலில் எடுத்து விசாரிக்க அதிகாரம் உள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற காலத்தை நீதிமன்ற காவல் காலமாக கருத முடியாது. கைது, நீதிமன்ற காவல் சட்டப்படியானது, ஆட்கொணர்வு மனு ஏற்கத்தக்கதல்ல என்றார்.