Tamilசெய்திகள்

சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் அதிர்வு – சாலையில் தஞ்சம் அடைந்த குடியிருப்பு வாசிகள்

சென்னை கொரட்டூர் அரசு அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென அதிர்வு ஏற்பட்டுள்ளது. சுமார் 20 வினாடிகள் இந்த அதிர்வு உணரப்பட்டதால், அங்கு வசித்தவர்கள் சாலையில் தஞ்சம் அடைந்தனர்.

கொரட்டூரில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்திற்கு சொந்தமான கோல்டன் பிளாக் என்ற அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. 9 தளங்களை கொண்ட இந்த அடுக்குமாடி குடியிருப்பில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இன்று அதிகாலை திடீரென கட்டிடம் குலுங்குவதுபோல் உணரப்பட்டதால் அங்கு வசித்தவர்கள், காவல்கட்டுப்பாடு அறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மேற்கொண்ட ஆய்வில் எந்தவித நிலஅதிர்வும் அதிகாரப்பூர்வமாக பதிவாகவில்லை எனத் தெரிவித்தனர்.

2019-ம் ஆண்டு தமிழக வீட்டுவசதி வாரிய திட்டத்தின் கீழ் இந்த குடியிருப்பு வழங்கப்பட்டதாகவும், சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதாகவும், கட்டிடம் வழங்கப்பட்ட இரண்டு மாதங்களிலேயே விரிசல் ஏற்பட்டதாகவும், இது குறித்து உரிய அதிகாரிகளிடம் முறையிட்டு விரிசல்கள் சரி செய்யப்பட்ட நிலையில், அதில் திருப்தியில்லை என்பதால் போராட்டம் நடத்தியதாகவும், அரசு பல்கலைக்கழக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு சரி செய்யப்பட்டதாகவும், உயிருக்கு உத்தரவாதம் இல்லாத இந்த குடியிருப்பில் வசிப்பது கேள்விக்குறியாக உள்ளதாகவும், அரசு தலையிட்டு இதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் எனவும் குடியிருப்புவாசிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.