Tamilசெய்திகள்

செம்பாக்கம் ஏரியில் உலோக மாசுகள் அதிகரிப்பு – ஐஐடி சென்னை சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் தகவல்

சென்னை தாம்பரம் செம்பாக்கம் ஏரியின் தன்மை குறித்து சென்னை ஐ.ஐ.டி. சார்பில் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வின்படி செம்பாக்கம் ஏரியில் ஈயம், தாமிரம் மற்றும் குரோமியம் ஆகிய உலோக மாசுகள் அதிகமாக இருப்பது தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக சுற்றுச் சூழல் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சர்வதேச இதழில் வெளியிடப்பட்டு உள்ளது. செம்பாக்கம் ஏரியில் அதிக அளவில் உலோக மாசுகள் இருப்பதால் இங்கு கழிவுநீர் வரத்து காணப்படுவதும், குப்பைகள் கொட்டப்படுவதும் தெரியவந்தது. ஈயத்தில் அதிக நச்சுத் தன்மை உள்ளது. குழாய்களில் உள்ள அமைப்புகளில் சிதைவு ஏற்பட்டதன் காரணமாக ஈயம் தண்ணீரில் கலந்துள்ளது. ஆனால் ஈயம் குரோமியத்தை விட தாமிர மாசுக்களே அதிகம் காணப்படுகிறது.

தாமிர மாசு ஏரிக்கு திறந்து விடப்படும் கழிவுநீரில் இருந்து வந்துள்ளது. மேலும் ஏரியில் அதிக அளவில் திடக்கழிவுகளை கொட்டியதால் குரோமியம் மாசு ஏற்பட்டுள்ளது. இந்த உலோக மாசு வானது ஏரி நீர் மற்றும் ஏரியில் உள்ள வண்டல் மண்ணில் கலந்துள்ளது. இந்த ஏரியில் கலந்துள்ள ஈய கழிவுகளால் ரத்த சோகை, உயர் ரத்த அழுத் தம், சிறுநீரக செயலிழப்பு, ஆண்மைக்குறைவு ஏற்படுகிறது.

தாமிர மாசுவால் கல்லீரல், சிறுநீரகம், இதயம், மூளை பாதிப்பு ஏற்படுகிறது. குரோமியம் மாசுவால் சுவாச பிரச்சினைகள், கண் எரிச்சல், தோல் புண்கள் போன்றவை ஏற்படுகிறது. இந்த ஏரியில் உள்ள செடிகளின் வேர்களில் தண்ணீர் மற்றும் வண்டல் மண்ணில் இருப்பதை விட 1000 மடங்கு உலோக மாசு படிந்துள்ளது.

மேலும் 24 இடங்களில் இருந்து கழிவுநீர் வருகிறது. இதுகுறித்து பேராசிரியர் ஒருவர் கூறுகையில், “செம்பாக்கம் ஏரிக்கு வரும் கழிவுநீரை சுத்திகரிக்கும் திட்டம் உள்ளது. ஆனால் இதற்கு ஒரு வருடம் ஆகும். எனவே அதுவரை நீர்வாழ் தாவரங்கள் மூலம் மாசுவை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.