Tamilசெய்திகள்

டெல்லி காய்கறி சந்தைக்கு திடீரென்று விசிட் அடித்த ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி சமீப காலமாக பொது இடங்களுக்குச் சென்று டிரைவர், விவசாயிகள், மெக்கானிக்குகள் போன்றோரைச் சந்தித்து வருகிறார். கடந்த மாதம் அரியானா மாநிலம் மதினா கிராமத்தில் விவசாயிகளுடன் விவசாயப் பணியில் ஈடுபட்ட ராகுல் காந்தி, சில பெண் விவசாய தொழிலாளர்களை தனது தாய் சோனியா காந்தி வீட்டுக்கு அழைத்து, அவர்களுடன் மதிய உணவும் உண்டார்.

இந்நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள ஆசாத்பூர் காய்கறி சந்தை ஆசியாவிலேயே பெரிய காய்கறி சந்தையாக கருதப்படுகிறது. இங்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அதிகாலை 4 மணியளவில் திடீரென சென்றார். அவரைப் பார்த்து ஆச்சரியமடைந்த காய்கறி வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் வணக்கம் கூறினர். ராகுல் காந்தியும் பதிலுக்கு வணக்கம் தெரிவித்தார். சிலர் அவருடன் கைகுலுக்கினர்.

காய்கறி வியாபாரிகளுடன் உரையாடிய ராகுல் காந்தி, காய்கறி மற்றும் பழங்களின் விலை குறித்து விசாரித்தார். ராகுல் காந்தியுடன் ஏராளமான பாதுகாப்பு வீரர்களும் சென்றிருந்தனர். ஏற்கனவே, ஆசாத்பூர் மண்டியில் தக்காளி விலை வெகுவாக உயர்ந்துவிட்டதால் அதை வாங்க தன்னிடம் பணமில்லை என காய்கறி வியாபாரி ஒருவர் கண்ணீர் சிந்தும் வீடியோவை ராகுல் காந்தி டுவிட்டரில் பகிர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.