Tamilசெய்திகள்

தமிழகத்தின் 5 மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களில் மிக கனமழை – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தமிழகத்தின் தென்மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை வெளுத்து வாங்க உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறுகையில், ” தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையை பொறுத்தவரை அக்டோபர் 1ம் தேதி முதல் இன்று வரை 12 செ.மீ., மழை பெய்துள்ளது. இது வழக்கத்தைவிட 40 சதவீதம் மழைப்பொழிவு குறைவாகும். இந்நிலையில், குமரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு கன முதல் மிக கனமழை பெய்யும்.

சென்னை பொறுத்தவரையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிதமான மழையும், அவ்வப்போது கனமழையும் பெய்யக்கூடும். அதிகபட்சமாக சிதம்பரத்தில் 8 செ.மீ மழை பெய்துள்ளது” என்றார்.