Tamilசெய்திகள்

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்

தமிழகத்தில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சிலர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:-

கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளர் ஜெகநாதன், வணிகவரித்துறை ஆணையராக மாற்றப்பட்டார். வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டார்.

வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை செயலாளர் சமயமூர்த்தி வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறையின் செயலாளராக இடம் மாற்றப்பட்டார். விழிப்பு பணி ஆணையர் மற்றும் நிர்வாக சீர்திருத்த ஆணையர் கோபால் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சிறப்பு திட்ட செயலாக்கத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனா திட்டங்கள் மற்றும் மேம்பாட்டுத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக மாற்றப்பட்டார். தமிழ்நாடு கைவினைகள் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குனர் சோபனா எழுதுபொருள் அச்சுத்துறை ஆணையராக நியமிக்கப்பட்டார். சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணைய தலைமை செயல் அதிகாரி கவிதா ராமு தமிழ்நாடு கைவினைகள் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.