Tamilசெய்திகள்

தமிழ்நாட்டில் நல்லாட்சியின் அத்தாட்சியாகவே சிறப்பான முதலீட்டுச் சூழல் அமைந்துள்ளது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் கண்ணாடி தயாரிக்கும் ‘செயிண்ட் கோபைன்’ தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் ஓரகடம் உள்ளிட்ட இடங்களில் புதிய உற்பத்தியை தொடங்க முதலீடு செய்ய உள்ளது. இதைத் தொடர்ந்து கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் ‘செயிண்ட் கோபைன்’ நிறுவன அதிகாரிகள் நடத்திய கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு அவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:

தமிழ்நாட்டிற்கும் செயிண்ட் கோபைன் நிறுவனத்திற்குமான உறவு ஏறத்தாழ 25 ஆண்டு வரலாறு கொண்டது. 1998-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஸ்ரீபெரும்புதூரில் இந்நிறுவனத்திற்கான அடிக்கல் நாட்டி வைத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர்.

தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூர், பெருந்துறை மற்றும் திருவள்ளூர் ஆகிய இடங்களில் செயிண்ட் கோபைன் நிறுவனம் பல்வேறு தொழில் திட்டங்களை நிறுவி, ஏறத்தாழ 5 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பும் அளித்துள்ளது. தனது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தையும் சென்னையில் அமைத்து உள்ளது. கடந்த ஆண்டு மார்ச் 9 அன்று, ஸ்ரீபெரும்புதூர் செயிண்ட் கோபைன் நிறுவனத்தில் மிதவைக் கண்ணாடிப் பிரிவு, ஒருங்கிணைந்த ஜன்னல் பிரிவு, நகர்ப்புற வனம் ஆகியவற்றைத் தொடங்கி வைத்துப் பார்வையிட்டேன் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

தற்போது செயிண்ட் கோபைன் நிறுவனம், ஒரகடத்தில் ஒரு புதிய உற்பத்தித் திட்டமும், ஸ்ரீபெரும்புதூர், பெருந்துறை மற்றும் திருவள்ளூர் திட்டங்களில் விரிவாக்கமும் மேற்கொள்ள உள்ளது. இம்மாநிலத்தில் நல்லாட்சி மற்றும் சிறப்பான முதலீட்டுச் சூழல் அமைந்திருப்பதற்கான அத்தாட்சியாகவே நான் கருதுகிறேன். சுமார் 3400 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 1150 நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்று மேற்கொள்ளப்படும் இத்திட்டத்திற்கான அனைத்து உதவிகளையும் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்படும் என்று நான் உறுதியளிக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில், செயிண்ட் கோபைன் நிறுவனத்தின் தலைவர் பியரி ஆன்ட்ரி டி சேலண்டர், தலைமை செயல் அலுவலர் பெனாய்ட் பாசின், அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தொழில், வர்த்தகத்துறை செயலாளர் அருண்ராய், தலைமை செயல் அலுவலர் விஷ்ணு ஆகியோர் உடனிருந்தனர்.