Tamilசெய்திகள்

திருப்பதி கோவில் நடைபாதையில் சிறுத்தை மீண்டும் மனிதர்களை வேட்டையாடும் – பக்தர்களுக்கு எச்சரிக்கை

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் அலிப்பிரி நடைபாதையில் 6 வயது சிறுமியை சிறுத்தை கல்வி சென்று கடித்துக் கொன்றது. இந்த சம்பவம் பக்தர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அலிப்பிரி நடைபாதையில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை தேவஸ்தான அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

மேலும் சிறுத்தைகளைப் பிடிக்க வனப்பகுதியில் கூண்டு வைக்கப்பட்டுள்ளது. நேற்று பெரிய சிறுத்தை ஒன்று கூண்டில் சிக்கியது. இந்த சிறுத்தை சிறுமியை கொன்றிருக்க வாய்ப்பில்லை என வனத்துறை தெரிவித்தனர். இதனால் பிடிப்பட்ட சிறுத்தையின் கால் நகங்கள், ரத்தம் ஆகியவற்றை மரபணு ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர்.

இதன் மூலம் இந்த சிறுத்தை சிறுமியை கொன்றதா இல்லையா என்பது உறுதிபடுத்தப்படும். ஒருவேளை இந்த சிறுத்தை சிறுமியை கொன்றிருந்தால் இதனை வனப்பகுதியில் விட முடியாது. அவ்வாறுவிட்டால் இந்த சிறுத்தை மீண்டும் நடைபாதையில் வந்து பக்தர்களை வேட்டையாடும்.

இந்த நிலையில் நேற்று அலிப்பிரி பாதையில் சிறுத்தை ஒன்றும், கரடி ஒன்றும் நடமாடியது. அந்த சிறுத்தை சிறுமியை கொன்றதாக இருக்கலாம் என்று பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் நடைப்பாதையில் மீண்டும் மனிதர்களை சிறுத்தை வேட்டையாட வாய்ப்புள்ளது. எனவே பக்தர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக தேவஸ்தான அதிகாரிகள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்குப் பிறகு அறங்காவலர் குழு தலைவர் கருணாகர ரெட்டி கூறுகையில்:-

பக்தர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள நடை பாதையில் செல்லும் பக்தர்களுக்கு கைத்தடி வழங்கப்படும். நடைபாதையில் இரவு நேரங்களில் அதிக அளவில் வெளிச்சம் தரக்கூடிய விளக்குகள் பொருத்தப்படும் என்றார்.