Tamilசினிமா

‘தீயவர் குலைகள் நடுங்க’ படத்தின் படப்பிடிப்பு முடிந்தது

அறிமுக இயக்குனர் தினேஷ் இலட்சுமணன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘தீயவர் குலைகள் நடுங்க’. இந்த படத்தில் அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும், ‘பிக் பாஸ்’ அபிராமி, ராம்குமார், ஜி. கே. ரெட்டி, லோகு, எழுத்தாளரும், நடிகருமான வேல.ராமமூர்த்தி, தங்கதுரை, பிராங்க் ஸ்டார் ராகுல், ஒ. ஏ. கே. சுந்தர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இன்வெஸ்டிகேசன் ஆக்சன் திரில்லராக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜி. எஸ். ஆர்ட்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. அருள்குமார் தயாரித்திருக்கிறார். பரத் ஆசிவகன் இசையமைக்கும் இப்படத்திற்கு சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளதாக படக்குழு புகைப்படங்களை பகிர்ந்து அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது இப்படத்தின் இறுதி கட்டப்பணிகள் தொடங்கியுள்ளது. ஏற்கனவே வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.