Tamilசினிமா

நடிகர் ராகவா லாரன்ஸ் அறக்கட்டளைக்கு ரூ.1 கோடி நன்கொடை வழங்கிய லைகா சுபாஷ்கரன்

இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘சந்திரமுகி -2’. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இதில் நடித்திருக்கின்றனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ளார். ‘சந்திரமுகி 2’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது.

இதையடுத்து இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை புறநகரில் அமைந்திருக்கும் தனியார் பொறியியல் கல்லூரியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பட குழுவினருடன் தயாரிப்பாளர் லைகா சுபாஷ்கரன், பிரேமா சுபாஷ்கரன், சுபாஷ்கரனின் தாயார் ஞானாம்பிகை ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் ராகவா லாரன்ஸ் பேசியதாவது, என்னுடைய மாணவர்களை அனைத்து மேடைகளிலும் நடனமாட வைக்க வேண்டும் என விரும்புகிறேன். ஆனால் ஒரு சில நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் என்னிடம் உங்களுடைய மாணவர்கள் தொடர்ச்சியாக மேடை ஏறி நடனமாடும் வாய்ப்பை அளித்தாலும், ஒரே மாதிரியான நடனங்களைத் தானே ஆடுகிறார்கள் . இது பார்வையாளர்களுக்கு போரடிக்காதா? என கேட்பார்கள். அவர்களிடத்தில் திரிஷா, நயன்தாரா நடனம் ஆடினாலும், அவர்களும் ஒரே நடனத்தை தானே ஆடுகிறார்கள். அதை மட்டும் திரும்பத் திரும்ப பார்க்கிறீர்களே அதனால் இதையும் திரும்பத் திரும்ப பார்க்கலாமே எனச் சொல்வேன்.

நான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் அவர்களுக்கு மேடை ஏறும் வாய்ப்பை வழங்குவதால் அவர்களுடைய குடும்பத்திற்கு வாழ்வாதாரம் கிடைக்கிறது. ஏனெனில் அவர்களுக்கு இந்த நடனத்தை தவிர வேறு எதுவும் தெரியாது. இவர்களுடைய நடனத்தில் கவர்ச்சி இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஒரு வலி இருக்கிறது. இவர்களுடைய ஆட்டத்தில் அழகு இருக்கிறதோ இல்லையோ. கடவுள் இருக்கிறார். இதனால் இந்த குழுவினருக்கு வாய்ப்பளியுங்கள்.

என்னுடைய மாணவர்களின் நிகழ்ச்சியை பார்த்த பிறகு சிலர் உதவி செய்வார்கள். ஆனால் நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருக்கும் போதே அதுவும் ஒரு கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கிய சுபாஷ்கரனுக்கு நன்றி. என்னுடைய அறக்கட்டளைக்கு யாரும் நிதி உதவி வழங்க வேண்டாம் என்று ஓராண்டிற்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தேன். ஏனெனில் நான் தற்போது நன்றாக சம்பாதித்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு கிடைக்கும் வருவாயில் அறக்கட்டளைக்கு தேவையான நலத்திட்ட பணிகளை செய்து கொண்டிருக்கிறேன். வேண்டாம் என்று சொல்லும் போது கடவுள் கொடுப்பார் என்று சொல்வார்கள். அது போல் தற்போது சுபாஷ்கரன் ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கி இருக்கிறார். அவருடைய மனம் பெரியது. இதன் மூலம் நிறைய பேரின் பசி தீர்க்கப்படும்.

இந்த மாணவர்கள் தங்குவதற்கும், நடன பயிற்சி மேற்கொள்வதற்கும் கட்டிடம் ஒன்றை கட்ட வேண்டும் என்று விரும்பினார்கள். நீங்கள் வழங்கும் அந்த நன்கொடையில் இந்த மாணவர்களுக்காக ஒரு இடத்தை வாங்கி, அவர்களுக்கான கட்டிடம் ஒன்றை கட்டி, அதற்கு உங்களின் தாயாரின் பெயரை சூட்டுவோம். இவை அனைத்தும் இன்னும் ஒரு வருடத்தில் நிறைவேறும் என உறுதியளிக்கிறேன்.

சந்திரமுகியாக கங்கனா நடிக்கப் போகிறார் என வாசு சார் சொன்னவுடன், அவர் மிகவும் துணிச்சல் மிக்கவர். சமூக வலைதளங்களில் தீவிரமாக தனது கருத்தை பதிவு செய்பவர். வாழ்க்கையில் கஷ்டப்பட்டு முன்னேறியவர் என்பதால் எப்படி நடந்து கொள்வாரோ என்று எண்ணிக் கொண்டிருந்தேன். படப்பிடிப்பு தளத்தில் முதல் நாள் வருகை தரும் போது அவருடன் துப்பாக்கி ஏந்திய காவலர்களும் வந்தனர். அவர் ஒரு கலைஞர்தானே எதற்கு அவருடன் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் வரவேண்டும்? என எண்ணினேன். இது தொடர்பாக வாசுசாரிடம் கேட்டபோது. ‘அவர் இப்படித்தான். அவருக்கு சில பாதுகாப்பு காரணங்களுக்காக ஆயுதம் எழுதிய காவலர்கள் உடன் வருவார்கள்’ என விளக்கம் சொன்னார்.

அப்போது அவரைப் பார்த்து வணக்கம் சொல்வதற்கு கூட பயமாக இருந்தது. அதன் பிறகு அவரிடம் என் எண்ணத்தை பகிர்ந்து கொண்டேன். அவர் உடனடியாக ஆயுதம் ஏந்திய காவலர்களிடம் பேசி அவர்களை சற்று தொலைவில் நிற்க வைத்தார். அதன் பிறகு கங்கனாவிடம் பழகத் தொடங்கி, கங்கனா என்றேன். அதன் பிறகு கங்கு என்றேன். படப்பிடிப்பு தளத்தில் அவரும் கலாட்டா செய்வார். மகிழ்ச்சியாக இருப்பார். உற்சாகத்துடன் இருப்பார். நான் பழகியதில் குழந்தை உள்ளம் கொண்ட நடிகை என கங்கனாவை சொல்லலாம் அவர் இந்த படத்தில் நடித்திருப்பது படத்திற்கு பலம். ” என்று பேசினார். இந்த நிகழ்ச்சியின் போது ராகவா லாரன்ஸின் அறக்கட்டளைக்காக லைகா தயாரிப்பாளர் சுபாஸ்கரன் ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கினார் என்பது குறிப்பிட்டத்தக்கது.