Tamilசினிமா

நடிகை ராதிகாவுக்கு நடிகவேல் செல்வி பட்டம்

டைரக்டர் சரண் இயக்கியிருக்கும் புதிய படம், “மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.“ இதில், பிக்பாஸ் புகழ் ஆரவ் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக காவ்யா தப்பார் நடித்திருக்கிறார். மேலும் சரத்குமார், ராதிகா சரத்குமார், நாசர், ரோகிணி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள். மோகன் தயாரித்துள்ள இப்படத்துக்கு சைமன் கே.கிங் இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று நடந்தது.

இந்த விழாவில், ராதிகா சரத்குமாருக்கு ‘நடிகவேள் செல்வி’ என்ற பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டது. சரத்குமார், டைரக்டர் சரண், ஆர்.கே. செல்வமணி, நாசர், ரோகிணி, தயாரிப்பாளர்கள் ஆர்.பி.சவுத்ரி, ஏ.எல்.அழகப்பன், தனஞ்செயன் ஆகியோருடன் படக்குழுவினரும் மேடையேறி ராதிகா சரத்குமாருக்கு பட்டம் வழங்கி வாழ்த்தினார்கள்.

அதற்கு நன்றி தெரிவித்து ராதிகா சரத்குமார் பேசியதாவது:- “என் அப்பாவின் நினைவு போற்றப்படுவதில் மகிழ்ச்சி. நான் முதன் முதலில் பாரதிராஜா படத்தில் நடித்தபோது என் தந்தை ஆச்சரியப்பட்டார். நான், சினிமாவில் ஆர்வம் இல்லாமல் இருந்தவள். முதன்முதலாக நடிக்கும்போது, மேக்கப்பை தொட்டு “என் தொழில் உன்னிடம் இருக்கட்டும்” என என்னை ஆசீர்வதித்தார். அவரது ஆசீர்வாதம்தான் என்னை இந்த இடத்தில் சேர்த்திருக்கிறது.

இந்த படத்தில் என் ‘கேரக்டர்’ என் அப்பாவின் சாயல் கொண்டது. அதுதான் இந்த பட்டம் கொடுக்க வேண்டும் என்று சரணுக்கு ஞாபகப்படுத்தியிருக்கும் என நினைக்கிறேன். எதுவானலும், எனக்கு இந்த பட்டம் வழங்கியதற்கு நன்றி.” இவ்வாறு ராதிகா சரத்குமார் பேசினார்.

சரத்குமார் பேசியதாவது:- “ராதிகாவை கவுரவப்படுத்தியதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. ராதிகா 41 வருடங்களாக சினிமாவில் இருக்கிறார். அவர் இன்னும் பல உயரங்களுக்கு செல்ல வேண்டியவர். என்னை விட, அவர் நடிப்பில் மூத்தவர், பிரபல நட்சத்திரம். என்னைப் பொறுத்தவரை அவர்தான் ‘லேடி சூப்பர் ஸ்டார்.” அவருக்கு ‘பத்மஸ்ரீ’ விருது கிடைத்திருக்க வேண்டும். ‘பத்மஸ்ரீ’க்கு தகுதியானவர் அவர்.” மேற்கண்டவாறு சரத்குமார் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *