Tamilசெய்திகள்

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வு – 20.87 லட்சம் பேர் தேர்வு எழுதினர்

நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) மூலம் சேர்க்கை நடத்தப்படுகிறது.

ராணுவக் கல்லூரிகள் பிஎஸ்.சி. நர்சிங் படிப்புக்கும் நீட் தேர்வு கட்டாயம். 2023-24ஆம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் 490க்கும் மேற்பட்ட நகரங்களில் நேற்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கியது.

நாடு முழுவதும் தமிழ், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் மருத்துவ நுழைவுத்தேர்வுக்கான நீட் தேர்வு நடைபெற்றது. தேசிய அளவில் 11.84 லட்சம் மாணவிகள், 9.03 லட்சம் மாணவர்கள், 13 திருநங்கைகள் என மொத்தம் 20.87 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இது கடந்த ஆண்டை விட 2.15 லட்சம் அதிகம்.

தமிழகத்தில் 95,823 மாணவிகளும், 51,757 மாணவர்களும் என மொத்தம் 1 லட்சத்து 47,581 மாணவர்களும் தேர்வு எழுத உள்ளனர். அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரம். தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட 24 மாவட்டங்களில் தேர்வு நடைபெற்றது. சென்னையில் மட்டும் 28 மையங்களில் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர்.

இந்நிலையில், நாடு முழுவதும் 499 நகரங்களில் நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நிறைவடைந்தது. நீட் தேர்வு பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.20 மணிக்கு நிறைவடைந்தது. மாணவர்கள் ஆர்வத்துடன் நீட் தேர்வை எழுதினர்.