Tamilசெய்திகள்

நான் காங்கிரஸ் தலைவரானால் கட்சியின் தற்போதைய செயல்பாடுகளை மாற்றிக்காட்டுவேன் – சசி தரூர் பேட்டி

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் வரும் 17-ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அக்கட்சியின் மூத்த தலைவர்களான கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மல்லிகார்ஜூன கார்கேயும், கேரளாவை சேர்ந்தவருமான சசி தரூரும் போட்டியிடுகின்றனர்.

இந்த நிலையில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு சசி தரூர் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:

காங்கிரஸ் கட்சி அதிகாரத்தை பரவலாக்க வேண்டும். கட்சியின் அடித்தட்டு நிர்வாகிகளுக்கு உண்மையிலேயே அதிகாரம் வழங்க வேண்டும். நான் சீர்திருத்தம் மற்றும் மாற்றத்துக்கான வேட்பாளர் ஆவேன். நான் காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால், உதய்பூர் சிந்தனை அமர்வில் ஒரு மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரகடனத்தை அப்படியே முழுமையாய் செயல்படுத்துவேன்.

உட்கட்சி ஜனநாயகத்தை இன்னும் வலுப்படுத்த காங்கிரஸ் காரியக் கமிட்டிக்கு தேர்தல் நடத்துவேன். 25 ஆண்டுகளாக செயலற்று கிடக்கும் கட்சியின் ஆட்சிமன்றக் குழுவுக்கு புத்துயிரூட்டுவேன். கட்சி விவகாரங்களிலும் ஆட்சி விவகாரங்களிலும் பா.ஜ.க.வின் அதிகார மயமாக்கலுக்கு எதிரான நம்பகமான மாற்றை காங்கிரஸ் வழங்க வேண்டும்.

2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு சரியான போட்டியை ஏற்படுத்தும் விதத்தில் கட்சியின் தற்போதைய செயல்பாடுகளை மாற்றிக் காட்டுவேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.