Tamilசெய்திகள்

நாளை சேலத்தில் நடைபெறும் பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்

பாராளுமன்ற தேர்தலையொட்டி நாடு முழுவதும் பிரதமர் நரேந்திர மோடி சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்து வருகிறார். ஏற்கனவே தமிழகத்தில் திருப்பூர் மாவட்டம் பல்லடம், நெல்லை, சென்னை நந்தனம், கன்னியாகுமரி ஆகிய இடங்களில் பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொண்டார்.

இந்தநிலையில் இன்று மாலை கோவையில் பிரதமர் மோடி ரோடு ஷோ (வாகன பேரணி) செல்கிறார். கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சாய்பாபா காலனி போலீஸ் நிலையம் அருகே புறப்படும் இந்த வாகன பேரணி ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் நிலையம் அருகே முடிவடைகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி கர்நாடக மாநிலம் சிவமொக்காவில் இருந்து விமானம் மூலம் மாலை 5.30 மணிக்கு கோவை வருகிறார். பின்னர் சாய்பாபா காலனிக்கு சென்று வாகன அணி வகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இதில் கட்சி நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் பங்கேற்கிறார்கள். இந்த நிகழ்ச்சியை முடித்து கொண்டு பிரதமர் மோடி இரவு கோவையில் தங்குகிறார்.

பின்னர் நாளை (19-ந் தேதி) கோவையில் இருந்து கேரள மாநிலம் பாலக்காடுக்கு பிரதமர் மோடி புறப்பட்டு செல்கிறார். அங்கு காலை 11.40 மணியளவில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். அதனை தொடர்ந்து சேலம், நாமக்கல், கரூர் பாராளுமன்ற தொகுதிக்கான பிரசாரக்கூட்டம் சேலத்தில் நாளை மதியம் 1.30 மணியளவில் நடக்கிறது. இதற்காக சேலம் அருகே உள்ள கெஜ்ஜல் நாயக்கன்பட்டியில் 44 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட பந்தல் மற்றும் மேடை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பிரசாரக்கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோடி சிறப்புரையாற்றுகிறார். இதற்காக பிரதமர் நரேந்திர மோடி பாலக்காட்டில் இருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு மதியம் 1.30 மணியளவில் மேடை அமைக்கப்பட்டுள்ள சேலம் கெஜ்ஜல் நாயக்கன்பட்டி மைதானத்திற்கு வருகிறார். இதற்காக அங்கு 3 ஹெலிபேடுகள் அமைக்கப்பட்டுள்ளது.

சேலம் வரும் பிரதமர் மோடிக்கு சேலம், நாமக்கல் , கரூர் பாராளுமன்ற தொகுதி பா.ஜனதா நிர்வாகிகள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. தொடர்ந்து பிரதமர் மோடி பொதுக்கூட்ட மேடையில் பா.ஜ.க.வுக்கு ஆதரவு திரட்டும் வகையில் சிறப்புரையாற்றுகிறார். அப்போது மக்களையும் சந்திக்கிறார்.

இந்த கூட்டத்தில் மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, மத்திய மந்திரி எல்.முருகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் திரளாக பங்கேற்கிறார்கள். மோடியின் வருகையையொட்டி அவரை வரவேற்று அந்த பகுதியில் கொடி, தோரணங்கள் கட்டப்பட்டுள்ளதுடன் பிரமாண்ட பிளக்ஸ் பேனர்களும் வைக்கப்பட்டுள்ளது. மோடி வருகையையொட்டி பா.ஜனதாவினர் உற்சாகம் அடைந்துள்ளனர். சேலத்தில் நடைபெறும் இந்த பொதுக்கூட்டத்தில் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்பார்கள் என்பதால் அவர்கள் வரும் வாகனங்கள் நிறுத்தவும், மதிய உணவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொதுக்கூட்ட மைதானத்திற்குள் செல்பவர்கள் அனைவரும் மெட்டல் டிடெக்டர் நுழைவு வாயில் மூலம் அனுமதிக்கப்படுவார்கள். சேலம் பொதுக்கூட்டம் முடிந்ததும் இங்கிருந்து ஹெலிகாப்டரில் பிரதமர் மோடி புறப்பட்டு செல்கிறார். இதற்கான ஏற்பாடுகளை பொதுக்கூட்ட ஒருங்கிணைப்பாளரும், மாநில துணைதலைவருமான கே.பி.ராமலிங்கம் தலைமையில் கட்சி நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

பிரதமர் மோடி வருகையையொட்டி சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி., அருண், டி.ஐ.ஜி.க்கள், 12 போலீஸ் சூப்பிரண்டுகள், 18 கூடுதல் சூப்பிரண்டுகள், 32 துணை சூப்பிரண்டுகள், 60 இன்ஸ்பெக்டர்கள், 208 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 2 ஆயிரத்து 700 போலீசார் என 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

மேலும் பிரதமரின் தனி பாதுகாப்பு படையினரும் வெடிகுண்டு தடுப்பு பிரிவினரும் மைதானம் முழுவதும் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் நேற்று மாலை முதல் மைதானம் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. வெளிநபர்கள் யாரும் உள்ளே நுழைய அனுமதிக்கவில்லை.

பிரதமர் சேலம் வருகையையொட்டி பாதுகாப்பு கருதி இன்றும், நாளையும் 2 நாட்கள் டிரோன்கள் மற்றும் ஆள் இல்லாத விமானங்கள் பறக்க தடை விதித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன் உத்தரவிட்டுள்ளார்.