Tamilவிளையாட்டு

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி – 319 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு ஆடும் பாகிஸ்தான்

பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கராச்சியில் நடந்துவருகிறது. டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 449 ரன்னில் ஆல் அவுட்டானது.

டேவன் கான்வே சதமடித்து 122 ரன்னில் ஆட்டமிழந்தார். டாம் லாதம் 71 ரன்னிலும், டாம் பிளெண்டல் 51 ரன்னிலும் அவுட்டாகினர். மாட் ஹென்றி 68 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பாகிஸ்தான் தரப்பில் அப்ரார் அகமது 4 விக்கெட்டும், நசீம் ஷா, அகா சல்மான் தலா 3 விக்கெட்டும் வீழ்த்தினர். அடுத்து முதல் இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் 408 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இமாம் உல் ஹக் 83 ரன்னும், சர்ப்ராஸ் கான் 78 ரன்னும் எடுத்தார். பொறுப்புடன் ஆடிய ஷகீல் சதமடித்தார். அவர் 125 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதையடுத்து, 41 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து அணி 277 ரன்னில் டிக்ளேர் செய்தது. டாம் பிளெண்டல் 74 ரன்னும், டாம் லாதம் 62 ரன்னும் எடுத்து வெளியேறினார். பிரேஸ்வெல் 74 ரன் எடுத்து அவுட்டாகாமல் உள்ளார். இதனால் 319 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் 2-வது இன்னிங்ஸை தொடங்கியது.

அந்த அணியின் அப்துல்லா ஷபீக் , மிர் ஹம்சா டக் அவுட்டாகினர். 4-வது நாள் முடிவில் பாகிஸ்தான் ரன் எதுவும் எடுக்காமல் 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இறுதி நாளான இன்று பாகிஸ்தான் வெற்றி பெற 319 ரன்கள் தேவை. நியூசிலாந்து வெற்றி பெற 8 விக்கெட்டுகள் தேவை.