Tamilவிளையாட்டு

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் – ஒரே குழுவில் இடம்பெற்ற இந்தியா, பாகிஸ்தான்

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அடுத்த 2 ஆண்டுக்கான காலண்டரை வெளியிட்டுள்ளது. 2023 ஆசிய கோப்பைக்கான தொடரில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே குழுவில் உள்ளன என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏசிசி) தலைவர் ஜெய் ஷா உறுதிப்படுத்தினார்.

பி.சி.சி.ஐ. செயலாளரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் (ஏசிசி) தலைவருமான ஜெய் ஷா 2023 மற்றும் 2024-ம் ஆண்டுக்கான கவுன்சிலின் கிரிக்கெட் காலண்டர் மற்றும் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆசிய கோப்பைக்கு தகுதி பெறுவதற்கான பாதை கட்டமைப்பை அறிவித்துள்ளார்.

இந்நிலையில், ஏ.சி.சியின் முக்கிய போட்டியான ஆடவர் ஆசிய கோப்பை செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இதில் 6 அணிகள் இடம்பெறும். 3 அணிகள் கொண்ட இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்தியா, பாகிஸ்தான் மற்றும் குவாலிபையர் 1 (ஆண்களுக்கான பிரீமியர் கோப்பை வென்றவர்கள்) ஒரு குழுவில் இடம்பெறுவர்.

இலங்கை, வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் மற்றுமொரு குழுவில் உள்ளன. இந்தப் போட்டியில் மொத்தம் 13 போட்டிகள் நடைபெறவுள்ளன என தெரிவித்தார்.