Tamilசெய்திகள்

நிலவின் மத்திய பகுதியில் ஆர்கான் – 40 வாயு – இஸ்ரோ விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ சார்பில் நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய சந்திராயன்-2 விண்கலம் 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் 22-ந்தேதி விண்ணில் ஏவப்பட்டது.

பல்வேறு கட்ட பயணங்களுக்கு பிறகு விண்கலத்தின் ஒரு பகுதியான ஆர்பிட்டர் நிலவின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது. அதே நேரத்தில் திடீர் தொழில் நுட்ப கோளாறு காரணமாக விண்கலத்தின் லேண்டர் கலன் திட்டமிட்டபடி நிலவில் தரை இறங்கவில்லை.

ஆனாலும் ஆர்பிட்டர் நிலவை சுற்றி வந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது. நிலவன் புறவெளி மண்டலம், சூரிய ஒளியின் தாக்கம், பருவ நிலை, அங்குள்ள பள்ளங்கள், குரோமியம், மாங்கனீஸ் தாதுக்கள், பனிக்கட்டி வடிவில் நீர் இருப்பதற்கான ஆதாரம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்த அரிய தகவல்கள் ஆர்பிட்டர் ஆய்வில் கிடைக்கப் பெற் றுள்ளன.

அந்த வகையில் நிலவின் மேற்பரப்பில் ஆர்கான்-40 என்ற வாயு உருவாகி புறவெளி மண்டலம் வரை பரவி இருப்பதை ஆர்பிட்டர் கலனில் உள்ள சேஸ்-2 என்ற கருவி தற்போது கண்டறிந்து உள்ளது.

இது தொடர்பாக இஸ்ரோ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நிலவில் புறவெளி மண்டல பகுதிகளில் ஏற்படும் மாற்றங்கள் தொடர்பாக சேஸ்-2 கருவி ஆய்வு செய்து வருகிறது. அதில் நிலவின் மேற்பரப்பில் உருவாகும் ஆர்கான்-40 வாயு புறவெளி மண்டலம் வரை பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டது.

குறிப்பாக நிலவின் மத்திய பகுதி மற்றும் உயர் அட்சரேகை பகுதியில் ஆர்கான்-40 அதிகம் இருப்பது தெரியவந்துள்ளது. இதற்கு முன்பு அவை புறவெளி மண்டலத்தில் மட்டுமே இருப்பதாக கருதப்பட்டு ஆய்வுகள் மேற் கொள்ளப்பட்டன.

தற்போது சந்திராயன்-2 ஆய்வில் ஆர்கான்-40 வாய்வுவின் இயற்பியல் கோட்பாடுகள் குறித்த முழு தகவல்கள் திரட்டப்பட்டு உள்ளன. இது நிலவு தொடர்பான ஆய்வில் ஒரு மைல் கல்லாகும். இதன் டேட்டாக்கள் அடுத்தக்கட்ட ஆய்வுகள் மற்றும் நிலவின் பயணங்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.