Tamilசெய்திகள்

நீட் தேர்வுக்கு எதிரான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை – வாய்தா கேட்க கூடாது என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

நீட் தேர்வுக்கு எதிராக அதிமுக ஆட்சிக் காலத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. இந்த வழக்கை விரைந்து நடத்தி தமிழக மாணவர்களுக்கு விடியலைக் கொண்டுவர வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நீட் தேர்வு தொடர்பாக மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட சட்ட திருத்தத்தை எதிர்த்து எனது தலைமையிலான அரசால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதன்பிறகு இந்த அரசு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்த வழக்கை நடத்த எந்தவித முயற்சியையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் அந்த வழக்கானது தாமாகவே உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்காக இன்று பட்டியலிடப்பட்டுள்ளது. ஆனால் அந்த வழக்கையும் நடத்த மனமில்லாமல் திமுக அரசு வாய்தா கோர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நீட் தரவரிசைப் பட்டியல் வெளிவர உள்ள நிலையில் வழக்கை நடத்தாமல் வாய்தா கேட்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. இச்செயல் தமிழக மாணவர்களின் மேல் திமுக அரசின் பொறுப்பற்ற தன்மையை வெளிக்காட்டுகிறது.
ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்திட்டு நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்வோம் எனவும் அதற்கான வழிமுறை தங்களுக்கு மட்டுமே தெரியும் என்று பொய்யான வாக்குறுதி அளித்து ஆட்சியை பிடித்த முதலமைச்சர் ஸ்டாலின், இந்த முறையாவது மூத்த வழக்கறிஞர்களை நியமித்து நீட் வழக்கை வெற்றிகரமாக நடத்தி, நீட் நுழைவுத் தேர்வு சட்டத்தை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அதிமுக முன்னாள் அமைச்சர்களக்கு எதிராக பொய் வழக்குகளை தொடுப்பதற்காக செலவிடும் நேரத்தில் ஒரு சிறு பகுதியையாவது நீட் வழக்கிற்காக ஒதுக்கி தமிழக மாணவர்களுக்கு ஒரு விடியலை ஏற்படுத்தித் தர வேண்டும். எப்போது நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெற்றுத் தருவீர்கள் ஸ்டாலின் அவர்களே.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.