Tamilசெய்திகள்

பாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் போட்டி – 12 தொகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளும் மக்கள் நீதி மய்யம்

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும் முனைப்பில் மக்கள் நீதி மய்யம் கட்சி தீவிரமாக செயலாற்றி வருகிறது. இதற்காக குறிப்பிட்ட சில தொகுதிகளை அடையாளம் கண்டு வைத்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியினர் அதில் கமல்ஹாசனை களம் இறக்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக 12 பாராளுமன்ற தொகுதிகளை மக்கள் நீதி மய்யம் கட்சியினர் அடையாளம் கண்டு வைத்துள்ளனர்.

இதில் தென் சென்னை, கோவை ஆகிய பாராளுமன்ற தொகுதிகள் முதல் இடத்தில் உள்ளன. மத்திய சென்னை, வட சென்னை, பொள்ளாச்சி, ஸ்ரீபெரும்புதூர், திருப்பூர், பொள்ளாச்சி உள்ளிட்ட தொகுதிகளும் இந்த 12 தொகுதிகளுக்குள் வருகின்றன.

இப்படி அடையாளம் காணப்பட்டுள்ள 12 தொகுதிகளில் ஒன்றில் கமல்ஹாசனை போட்டியிட வைத்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்பதில் கட்சியினர் கவனம் செலுத்தி வருகிறார்கள். இதற்காக இந்த தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி மக்கள் நீதி மய்யம் கட்சியினர் பணியாற்றி வருகிறார்கள்.

மக்களோடு மய்யம் என்ற பெயரில் தொகுதி வாரியாக மக்களை சந்தித்து வரும் கமல் கட்சியினர் கோவை தொகுதியில் கவனம் செலுத்தி பொதுமக்களின் குறைகளை கேட்டு வருகிறார்கள். அடுத்ததாக தென்சென்னை, மதுரை தொகுதிகளிலும், பின்னர் மற்ற தொகுதிகளிலும் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் மூலம் பாராளுமன்ற தேர்தலுக்குள் கமல்ஹாசன் போட்டியிடும் தொகுதி எது என்பதை இறுதி செய்யவும் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.