Tamilசெய்திகள்

பிரதமர் மோடி அருணாசல பிரதேசம் சென்றதற்கு சீனா எதிர்ப்பு

இந்திய பிரதமர் மோடி கடந்த 9-ந்தேதி அருணாசல பிரதேசம் சென்றிருந்தார். அப்போது சீனா எல்லையையொட்டி தவாங்- டிராங் பகுதிகளை இணைக்கும் வகையிலான ரூ.825 கோடி மதிப்பிலான சேலா சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

இந்த நிலையில் பிரதமர் மோடி அருணாசல பிரதேசம் சென்றதற்கு சீனா ராஜாங்க ரீதியிலான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது.

இந்திய பிரதமர் மோடி அருணாசல பிரதேச மாநிலம் சென்றதற்கு ராஜாங்க ரீதியில் எதிர்ப்பை தெரிவிக்கிறோம். எல்லைக்கோடு தொடர்பான பிரச்சினை முடியவடையாத நிலையில் அவரது பயணம், மேலும் அதை சிக்கலாக்கும். இந்தோ-சீனா கிழக்குப் பகுதியில் இந்திய தலைவர்கள் செல்வதற்கு சீனா கடும் கண்டனத்தை தெரிவிக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளது. ஆனால் சீனா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த போதிலும், அருணாசல பிரதேசம் எங்கள் நாட்டின் ஒரு பகுதி என இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

பிரதமர் மோடி திறந்து வைத்த ஒரு சுரங்கப்பாதை 1003 மீட்டர் நீளமும், மற்றொரு சுரங்கப்பாதை 1,595 மீட்டர் நீளமும் கொண்டது. இந்த சுரங்கப்பாதையில் அதிக சக்தி கொண்ட மின் விளக்குகள், தீயணைப்பு வசதிகள், காற்று வசதி உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் உள்ளது. இந்த சுரங்கப்பாதையால் தவாங்- டராங் இடையே பயண நேரம் ஒரு மணி நேரம் குறையும்.

எந்த மழைக்காலத்திலும், பனிக்காலத்திலும் போக்குவரத்து பாதிக்காத வகையில் இந்த சுரங்கப்பாதை அமைந்துள்ளது. ஆஸ்திரிய சுரங்கப்பாதை முறையை பயன்படுத்தி இந்த பிரமாண்ட சுரங்கப்பாதை கட்டப்பட்டுள்ளது.