Tamilவிளையாட்டு

பெண்கள் கிரிக்கெட்டில் அதிவேகமாக பந்து வீசி சாதனை படைத்த தென் ஆப்பிரிக்க வீராங்கனை

பெண்கள் பிரீமியர் லீக் டி20 தொடர் இந்தியாவின் பெங்களூரு, டெல்லி நகரங்களில் நடைபெற்று வருகிறது. பெங்களூருவில் உள்ள போட்டிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், நேற்று முதல் டெல்லியில் நடைபெற்று வருகிறது.

நேற்றைய போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியின்போது மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பிடித்துள்ள தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஷப்னிம் இஸ்மாயில் ஆட்டத்தின் 3-வது ஓவரை வீசினார். இந்த ஓவரின 2-வது பந்தை மேக் லேனிங் வீராங்கனைக்கு எதிராக 132.1 கி.மீட்டர் வேகத்தில் வீசினார்.

இதன்மூலம் பெண்கள் கிரிக்கெட்டில் அதிவேகமாக பந்து வீசிய வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார். இதற்கு முன்னதாக எந்த வீராங்கனையும் 130 கி.மீட்டர் வேகத்தை தாண்டியது கிடையாது. இதற்கு முன்னதாக 2016-ல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக 128 கி.மீட்டர் வேகத்தில் வீசியதே சாதனையாக இருந்தது. தற்போது அவர் சாதனையை அவரே முறியடித்துள்ளார். மேலும் 2022 உலகக் கோப்பை தொடரில் இரண்டு முறை 127 கி.மீட்டர் வேகத்தில் வீசியுள்ளார்.

தென்ஆப்பிரிக்கா அணிக்காக கடந்த 16 ஆண்டுகள் விளையாடிய 34 வயதான இஸ்மாயில் 127 ஒருநாள் மற்றும் 113 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் மட்டும் களம் இறங்கியுள்ளார்.

நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் 192 ரன்கள் குவித்தது. பின்னர் கடின இலக்குடன் களம் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியால் 163 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் 29 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.