Tamilசெய்திகள்

மணிப்பூருக்கு உதவ எங்களுக்கு உதவுங்கள் – பாதிகாப்பு படை வேண்டுகோள்

மணிப்பூரில் ஒரு சமூகத்தினர் தங்களை பழங்குடியினர் பிரிவில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால், பழங்குடியின பரிவில் இருப்பவர்கள் இதை எதிர்த்தனர். இதனால் கடந்த மே மாதம் 3-ந்தேதியில் இருந்து மணிப்பூரில் வன்முறை நடைபெற்று வருகிறது.

தொடக்கத்தில் வீடுகள், கடைகளை எரித்த கும்பல், தற்போது ஆயுதமேந்தி தாக்குதல் நடத்த தொடங்கிவிட்டன. இதனால் நாளுக்குநாள் மணிப்பூரில் சூழ்நிலை மோசமடைந்து வருகிறது. ஆயுதமேந்தி தாக்குதல் நடத்துபவர்களை ராணுவ வீரர்கள் கைது செய்து, ஆயுதங்களை பறிமுதல் செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் கிழக்கு இம்பால் இதாம் கிராமத்தில் ஆயுதமேந்திய 12 பேரை ராணுவ வீரர்கள் கைது செய்தனர்.

அப்போது பெண்கள் உள்பட 1500-க்கும் மேற்பட்டோர் சுற்றி வளைத்ததால், தாக்குதல் நடத்த மனமின்றி ராணுவம் அவர்களை விடுவித்து வந்தது. இதனால் துரிதமாக செயல்பட்டு வன்முறையை சம்பவத்தை கட்டுக்குள் கொண்டு வர ராணுவம் திணறி வருகிறது.

மேலும், பெண்கள் சமூக ஆர்வலர்கள் வழிகளை அடைத்து, ராணுவ தேடுதல் வேட்டைக்கு இடையூறு விளைவிக்கின்றனர் என ராணுவம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள ராணுவம் ”பெண் ஆர்வலர்கள் மணிப்பூரில் வேண்டுமென்றே வழிகளை தடுத்து வைத்துள்ளனர். பாதுகாப்புப்படையின் நடவடிக்கைக்கு தடங்களை ஏற்படுத்துகின்றனர். இதுபோன்ற தேவையற்ற குறுக்கீடு பாதுகாப்புப்படையால் குறிப்பிட்ட நேரத்தில் அசாம்பாவிதம் நடைபெறும் இடத்திற்கு சென்று உயிர்களையும், சொத்துக்களையும் காப்பாற்ற முடியாத நிலை உருவாகிறது.

அமைதியை நிலைநாட்ட எங்களின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்குமாறு அனைத்து தரப்பு மக்களையும் கேட்டுக்கொள்கிறோம். மணிப்பூருக்கு உதவ எங்களுக்கு உதவுங்கள்” எனத் தெரிவித்துள்ளது.