Tamilசெய்திகள்

மத்திய அக்னிபத் திட்டத்திற்கு எதிராக பீகாரில் இளைஞர்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது

மத்திய அரசு புதிய அக்னிபத் என்ற திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இந்த திட்டத்தின்படி ராணுவத்தில் சேரும் வீரர்களுக்கு 4 ஆண்டு காலத்திற்கு மட்டுமே பணியாற்ற அனுமதிக்கப்படுவர். இதில் வீரர்களுக்கு மாதாந்திர ஊதியம் வழங்கப்படும்.

4 ஆண்டுகால பணிக்காலம் முடிவடைந்ததும் சேவா நிதி என்ற ஒரே தடவையிலான தொகுப்பு வழங்கப்படும். ஆனால் இவர்களுக்கு பணிக்கொடை மற்றும் ஓய்வூதிய பயன்கள் அளிக்கபட மாட்டாது என தெரிவிக்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பீகாரில் இளைஞர்கள் நேற்றுமுதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 2வது நாளாக நடைபெறும் இந்த போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது.

போராடும் வீரர்கள் திடீரென சாலையில் இருந்த கற்களை எடுத்து காவல்துறையினர் மீது தாக்குதலில் ஈடுபட்டனர். மேலும் ரெயில் நிலையங்களுக்குள் நுழைந்த அவர்கள் கற்களை எடுத்து ரெயில்கள் மீது எதிர்ந்தனர். இதனால் ஒரு கட்டத்தில் காவல்துறையினர் துப்பாக்கியை காட்டி போராட்டக்காரர்களை விரட்டினர்.

நவாடா பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் சாலையில் வாகனங்களின் டயர்களை எரித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். பிரதமர் மோடிக்கு எதிராக தனது கோஷங்களையும் எழுப்பினர். இதையடுத்து அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டது. காவல்துறையினர் பல்வேறு யுக்திகள் மூலம் போராட்டங்களை ஒடுக்க முயற்சி செய்து வருகின்றனர்.