Tamilசெய்திகள்

மத்திய மந்திரி பியூஸ் கோயலுடன் பிரேமலதா விஜயகாந்த் ஆலோசனை

தமிழகத்தில் பா.ஜனதா தலைமையில் வலுவான கூட்டணியை உருவாக்கும் முயற்சி நடந்து வருகிறது. சென்னை வந்துள்ள மத்திய மந்திரி பியூஸ் கோயல் இரண்டு நாட்களாக சென்னையில் முகாமிட்டுள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டுள்ளார்.

கடந்த 2014 தேர்தலில் தமிழ்நாட்டில் கூட்டணி அமைப்பது தொடர்பாக பியூஸ்கோயல்தான் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார். அந்த வகையில் தே.மு.தி.க.வுடன் அவருக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது. வருகிற தேர்தலிலும் பா.ஜனதா கூட்டணியில் தே.மு.தி.க.வை சேர்க்க முயற்சித்து வருகிறார்கள். நேற்று மாலையில் விஜயகாந்த் வீட்டுக்கு சென்ற பியூஸ் கோயல் பிரேமலதாவுக்கு ஆறுதல் கூறினார். அப்போது பா.ஜனதா நிர்வாகிகள் கரு.நாகராஜன், காளிதாஸ், அதேபோல் தே.மு.தி.க. நிர்வாகி பார்த்தசாரதி ஆகியோரும் உடன் இருந்தார்கள். சாதாரணமாக அரசியல் சூழ்நிலைகள் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்.

பின்னர் பியூஸ்கோயல், பிரேமலதா, எல்.கே.சுதீஷ் ஆகிய 3 பேரும் தனியாக ஆலோசனை நடத்தினார்கள். இந்த சந்திப்பின் போது பா.ஜனதா கூட்டணிக்கு சில நிபந்தனைகளை விதித்து இருப்பதாக கூறப்படுகிறது. தொகுதி எண்ணிக்கை பற்றியும் விவாதித்ததாக கூறப்படுகிறது.

தே.மு.தி.க.வின் எதிர்பார்ப்பு பற்றி கட்சியின் அமைப்பு செயலாளர் பி.எல். சந்தோஷிடம் பியூஸ் கோயல் தெரிவிப்பார். பொங்கலுக்கு பிறகு பி.எல்.சந்தோஷ் சென்னை வர உள்ளார். அப்போது தமிழக நிர்வாகிகளுடனும் கலந்து பேசி தொகுதிகள் ஒதுக்குவது பற்றிய பேச்சுக்கள் தொடங்கும் என்று கூறப்படுகிறது.

கடந்த காலங்களில் தொகுதி பங்கீட்டில் தே.மு.தி.க. கறாராக இருந்தது. ஆனால் இப்போது கட்சி பலவீனம் அடைந்துள்ளது. ஏற்கனவே தொகுதி வாரியாக ஒவ்வொரு கட்சியின் செல்வாக்கு பற்றி அண்ணாமலை தனியாக ஆய்வு நடத்தி புள்ளி விபரங்களுடன் பட்டியல் தயார் செய்து வைத்துள்ளார். அதன் அடிப்படையிலேயே தொகுதி பங்கீடு பற்றி முடிவு செய்வார்கள் என்று கூறப்படுகிறது.