Tamilசெய்திகள்

ரூ.225 கோடிக்கு மேலான சொத்துக்களை ஏழைகளுக்கு தானம் செய்யும் இளம் பத்திரிகையாளர்

ஜெர்மனியின் புகழ்பெற்ற நிறுவனங்களில் ஒன்று பி.ஏ.எஸ்.எப். சோடா தொழிற்சாலையாக 1865-ல் இதை தொடங்கியவர் பிரெடரிக் ஏங்கல்கார்ன். தற்போது இந்த நிறுவனம் ரசாயன தொழில் மற்றும் விவசாயம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் கோலோச்சுகிறது.

இந்த நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடி சொத்துகள் உள்ளன. இந்த நிறுவனத்தின் இளம் வாரிசுகளில் ஒருவர் பத்திரிகையாளராக இருக்கும் மர்லின் ஏங்கல்கார்ன். இவருக்கு சமூக தொண்டு ஆர்வமும் அதிகம். வாரிசு உரிமையின் அடிப்படையில் அவருக்கு பாட்டி வழியில் இருந்து ரூ.225 கோடிக்குமேல் சொத்துகள் கிடைத்துள்ளது.

31 வயதான அவர், இந்த பணத்தை கொண்டு செல்வச் செழிப்புடன் தனது வாழ்க்கை முழுவதும் வாழலாம். ஆனால் அவர் அதன் மீது கொஞ்சமும் நாட்டமின்றி, பலருக்கும் அதை பகிர்ந்து கொடுக்க தீர்மானித்து உள்ளார். அதற்காக ‘மறுபகிர்வு கவுன்சில்’ என்ற திட்ட அமைப்பை உருவாக்கினார். அதன் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் ஆஸ்திரிய குடிமக்கள் 50 பேருக்கு அந்த தொகையை பகிர்ந்து வழங்குகிறார். இதற்காக 5 ஆயிரம் பேரிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளது. அவர்களில் 50 பேரை தேர்வு செய்து வாரம் தோறும் குறிப்பிட்ட தொகை அவர்களுக்கு சென்று சேரும் வகையில் கொடை வழங்குகிறார்.