Tamilசெய்திகள்

வெளிநாட்டு பயணம் பிரதமர் மோடிக்கு சீனா என்ற பெயரை உச்சரிக்க தைரியம் கொடுத்திருக்கும் – ஓவைசி கருத்து

பிரதமர் மோடி அமெரிக்கா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டு நேற்று அதிகாலை இந்தியா திரும்பினார். அமெரிக்காவில் இருந்தபோது, முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்தியாவில் சிறுபான்மையினர் உரிமை குறித்து மோடியிடம் ஜோ பைடன் விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். மேலும், நானாக இருந்தால் மோடியிடம் விவாதித்திருப்பேன் என்றார்.

இதற்கு மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் ஏ.ஐ.எம்.ஐ.எம். தலைவர் அசாதுதீன் ஓவைசி வெளிநாட்டு பயணம் மோடிக்கு சீனாவின் பெயரை உச்சரிக்க தைரியம் கொடுத்திருக்கும் என நம்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

சீனா இந்திய எல்லயைில் அத்துமீறி நுழைந்தபோது, மோடி சீனா என்ற பெயரை உச்சரிக்காமல் அண்டை நாடு போன்ற வார்த்தைகளைத்தான் பயன்படுத்தினார். இதனை சுட்டிக்காட்டி ஓவைசி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அசாதுதீன் ஓவைசி கூறுகையில் ”மோடியின் அரசு சீனாவுக்கு எதிராக பேசுவதை விட, மணிப்பூர் வன்முறை குறுித்து பேசுவதை விட ஒபாமாவை விமர்சனம் செய்வதில் ஆர்வமாக உள்ளது. மோடியின் வெளிநாட்டு பயணம் சீனாவின் பெயரை உச்சரிக்கவும், 8 வாரங்களாக பற்றி எரியும் மணிப்பூர் வன்முறை விவகாரத்தில் மவுனம் கலைக்கவும் தையரித்தை கொடுத்திருக்கும் என நம்புவோம்.

மணிப்பூர் ஆயுத கிடங்கில் இருந்து 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆயுதங்கள் எடுக்கப்பட்டுள்ளனர். ஒருவரை கூட இந்த விசயத்தில் தண்டிக்கவில்லை. காஷ்மீர் ஒருபுறம் இருக்கட்டும், எதிர்கட்சி ஆளும் எந்த மாநிலத்திலும் இப்படி நடப்பதையும், நமது ஊடகங்களில் இருந்து வரும் செய்திகளை கற்பனை செய்து பாருங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக புதிய இந்தியாவிடம் இருந்து (மோடி அரசு). இந்திய முஸ்லிம்களுக்கு சவுதி அரேபியா, ஈரான், எகிப்து முஸ்லிம்களுடன் தொடர்பு இல்லை என்பதை நிர்மலா சீதாராமனுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்.

நாங்கள் இந்திய முஸ்லிம்கள். நாங்கள் அம்பேத்கரின் அரசியலமைப்பை நம்புகிறோம். இந்திய முஸ்லிம்கள் 1947-ல் இந்தியாவில் தான் இருக்க விரும்பினார்கள். எகிப்து மசூதிக்கு சென்றீர்கள். மோடி அவர்களே, நீங்கள் காஷ்மீர் மசூதிக்கு வாருங்கள். நீங்கள் இந்திய பிரதமர், எகிப்து பிரதமர் இல்லை” என்றார்.