Tamilசெய்திகள்

14 நகரங்களில் 100 டிகிரியை தாண்டிய வெயில் – மக்கள் அவதி

தமிழகம் முழுவதுமே கோடை வெப்பம் சுட்டெரித்து வருகிறது. அதேவேளை ‘அக்னி நட்சத்திரம்’ என்று அழைக்கப்படும் கத்தரி வெயிலும் தனது கோர முகத்தை காட்டி வாட்டி வதைப்பதால், மக்கள் நிம்மதி இழந்து தவிக்கிறார்கள்.

இதற்கிடையே ‘நானும் இருக்கிறேன் பார்’ என்று உருவான ‘மோக்கா’ புயல், வெப்பத்தை ஏற்படுத்தி சென்றிருக்கிறது. சென்னை நகரமே அனல் பூமியாக மாறியிருக்கிறது. வெயிலின் தாக்கம் காலை முதலே காணப்படுகிறது. ஓட்டலில் அடுப்பு அருகே நின்று சமைக்கும் ‘மாஸ்டர்’ போலவே, மக்கள் அனைவருமே அனல் தாக்கத்தில் இருப்பது போல உணர்ந்து வருகிறார்கள்.

தமிழகத்தில் சென்னை, மதுரை, கடலூர், ஈரோடு, கரூர், நாகை, நாமக்கல், பாளையங்கோட்டை, பரங்கிப்பேட்டை, சேலம், தஞ்சை, திருச்சி, திருத்தணி, வேலூர் ஆகிய 14 நகரங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி சதம் அடித்தது. அதிகபட்சமாக வேலூரில் 108.14 டிகிரி வெயில் பதிவானது.

தமிழகத்தின் முக்கிய நகரங்களில் பதிவான வெயில் நிலவரம் வருமாறு:-

சென்னை நுங்கம்பாக்கம் -105.44 டிகிரி – (40.8 செல்சியஸ்)
சென்னை மீனம்பாக்கம் – 105.44 டிகிரி – (40.8 செல்சியஸ்)
கோவை – 96.8 டிகிரி – (36 செல்சியஸ்) குன்னூர் – 77 டிகிரி – (25 செல்சியஸ்)
கடலூர் – 102.92 டிகிரி – (39.4செல்சியஸ்)
தர்மபுரி – 98.96 டிகிரி – (37.2 செல்சியஸ்)
ஈரோடு – 103.64 டிகிரி – (39.8 செல்சியஸ்)
கன்னியாகுமரி – 92.12 டிகிரி – (33.4 செல்சியஸ்)
கரூர் – 104.9 டிகிரி – (40.5 செல்சியஸ்)
கொடைக்கானல் – 73.58 டிகிரி – (23.1 செல்சியஸ்)
மதுரை – 103.28 டிகிரி – (39.6 செல்சியஸ்)
நாகை – 100.04 டிகிரி – (37.8 செல்சியஸ்)
நாமக்கல் – 100.4 டிகிரி – (38 செல்சியஸ்)
பாளையங்கோட்டை – 102.02 டிகிரி – (38.9 செல்சியஸ்)
பரங்கிப்பேட்டை – 104.36 டிகிரி – (40.2 செல்சியஸ்)
சேலம் – 100.4 டிகிரி – (38 செல்சியஸ்)
தஞ்சை – 102.2 டிகிரி – (39 செல்சியஸ்)
திருப்பத்தூர் – 98.96 டிகிரி – (37.2 செல்சியஸ்)
திருச்சி – 103.1 டிகிரி – (39.5 செல்சியஸ்)
திருத்தணி – 105.8 டிகிரி – (41 செல்சியஸ்)
தொண்டி – 94.64 டிகிரி – (34.8 செல்சியஸ்)
தூத்துக்குடி – 93.2 டிகிரி – (34 செல்சியஸ்)
ஊட்டி – 78.62 டிகிரி – (25.9 செல்சியஸ்)
வால்பாறை – 83.3 டிகிரி – (28.5 செல்சியஸ்)
வேலூர் – 108.14 டிகிரி – (42.3 செல்சியஸ்)

தமிழகத்தில் இன்றும் அனேக இடங்களில் வெயில் சுட்டெரிக்கும் என்றும், ‘இயல்பை விட 3 டிகிரி வரை வெப்பம் உயரும்’ என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

‘மோக்கா’ புயல் கரையைக் கடந்தாலும், மேற்கு திசை காற்றும் மற்றும் வெப்பச்சலனம் காரணமாக 16, 17-ந் தேதிகளில் (இன்றும், நாளையும்) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழையும், 18, 19-ந் தேதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

மழை ஆறுதலை கொடுக்கும் வகையில் இன்னொரு அறிவிப்பும் இடம்பெற்றுள்ளது. அதாவது 16-ந் தேதி (இன்று) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பில் இருந்து 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும் என்றும், அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும்போது வெப்ப அழுத்தம் காரணமாக அசவுகரியம் ஏற்படலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

குறிப்பாக சென்னை மற்றும் புறநகர்ப்பகுதிகளை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 40 முதல் 41 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 முதல் 30 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.