Tamilசெய்திகள்

2028 ஆம் ஆண்டு உலக காலநிலை மாற்ற உச்சி மாநாடு இந்தியாவில் நடைபெற வேண்டும் – பிரதமர் மோடி விருப்பம்

உலக காலநிலை மாற்ற உச்சி மாநாடு ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை டெல்லியில் இருந்து துபாய் புறப்பட்டுச் சென்றார். விமான நிலையத்தில் அந்நாட்டின் துணை பிரதமர் மற்றும் உள்துறை மந்திரி ஆகியோர் பிரதமர் மோடியை வரவேற்றனர்.

விமான நிலையத்தில் இருந்து ஹோட்டலுக்கு செல்லும் வழியிலும், ஹோட்டலுக்கு வெளியேயும், பிரதமர் மோடிக்கு ஐக்கிய எமிரேட்சில் வாழும் இந்தியர்கள் அமோக வரவேற்பு அளித்தனர். மாநாட்டில் பங்கேற்க வந்த பல்வேறு நாட்டுத் தலைவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

இந்நிலையில், உலக காலநிலை மாற்ற உச்சி மாநாட்டின் தொடக்க அமர்வில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: \

வரும் 2028-ம் ஆண்டில் COP33 உச்சி மாநாட்டை நடத்த இந்தியா ஆவலாக உள்ளது. இன்று சூழலியலுக்கும் பொருளாதாரத்துக்கும் இடையிலான சமநிலைக்கு இந்தியா ஒரு சிறந்த உதாரணத்தை உலகின் முன் வைத்துள்ளது.

உலக மக்கள்தொகையில் 17 சதவீதம் இந்தியா இருந்தாலும், உலகளாவிய கார்பன் வெளியேற்றத்தில் அதன் பங்களிப்பு 4 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவாகும். புதைபடிவமற்ற எரிபொருள் இலக்குகளை அடைவதில் நாங்கள் வேகமாக முன்னேறி வருகிறோம். உண்மையில், காலக்கெடுவுக்கு 9 ஆண்டுக்கு முன்பே எங்களின் புதைபடிவமற்ற எரிபொருள் இலக்குகளை அடைந்தோம் என தெரிவித்துள்ளார்.