Tamilசெய்திகள்

3 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணியாற்றிய அரசு அதிகாரிகள் இடமாற்றம் – தேர்தல் ஆணையம் உத்தரவு

தமிழகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு ஊரக  உள்ளாட்சி தேர்தல்  நடத்தப்பட்டது.

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் புதிதாக பிரிக்கப்பட்டு அவற்றில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் எல்லைகள் முழுமையாக வகுக்கப்படாமல் இருந்தன.

இதையடுத்து இந்த 9 மாவட்டங்களிலும் ஏற்கனவே ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை.

இந்த நிலையில் விடுபட்ட 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு செப்டம்பர் 15-ந் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க தமிழக தேர்தல் கமி‌ஷனுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து இந்த 9 மாவட்டங்களில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள 9 மாவட்டங்களிலும் 3 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணிபுரியும் ஊழியர்களை வருகிற 31-ந் தேதிக்குள் இடமாற்றம் செய்ய தமிழக தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில் தேர்தல் அதிகாரியின் உத்தரவை நடைமுறைபடுத்துவதில் காஞ்சீபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் காலதாமதம் செய்வதாக ஊரக வளர்ச்சி துறை அலுவலக சங்கத்தினர் குற்றச்சாட்டு தெரிவித்தனர். இதுதொடர்பாக அவர்கள் கூறியதாவது:-

ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதையொட்டி ஊரக வளர்ச்சி துறையில் 3 ஆண்டுகள் பணிபுரிந்த இள நிலை உதவியாளர்கள், உதவியாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர்களை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று தேர்தல் கமி‌ஷன் உத்தரவிட்டுள்ளது.

அந்த பணிகளை விரைந்து செய்யாமல் காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஆகிய 2 மாவட்ட நிர்வாகத்தினர் மெத்தனமாக உள்ளனர். எனவே தேர்தல் கமி‌ஷன் உத்தரவை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், ‘3 ஆண்டுகள் பணிபுரிந்த ஊழியர்களின் பட்டியல்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. விரைவில் அவர்கள் இடமாற்றம் செய்யப்படுவார்கள்’ என்றார்.