தூத்துக்குடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை – சார் பதிவாளர்கள் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு!
தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் டிஜிபி அருண் உத்தரவின் பேரில், மாநிலம் முழுவதும் உள்ள 46 சார்பதிவாளர் அலுவலகங்களில் கடந்த ஜூன் 4ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஒரே நேரத்தில் திடீர் சோதனை நடத்தினர். இதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டிஎஸ்பி பீட்டர் பால்துரை தலைமையில், இன்ஸ்பெக்டர் அனிதா மற்றும் போலீசார் ஓட்டப்பிடாரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
இந்தச் சோதனையின் போது அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.2 லட்சம் ரொக்கப் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஓட்டப்பிடாரம் சார்பதிவாளர் (பொறுப்பு) பிரபாகர் (37), அலுவலக உதவியாளர் பால்ராஜ் (56), செல்வா வெங்கடப்பிரியா (35), சீதாலட்சுமி (40) மற்றும் ஆவண எழுத்தர்கள் அய்யம்பெருமாள் (57), பாலமுருகன் (56) ஆகிய 6 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதேபோன்று, தூத்துக்குடி கீழூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமி தலைமையிலான போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அங்கு நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.55,500 ரொக்கப் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது தொடர்பாகத் தூத்துக்குடி கீழூர் சார்பதிவாளர் செல்வி (40) மற்றும் அனிதா (47) ஆகிய இருவர் மீதும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த இரண்டு சம்பவங்கள் குறித்தும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் அடுத்தகட்ட மேல் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
