Tamilசெய்திகள்

வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 860 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

வார இறுதி நாட்களை முன்னிட்டு நாளை (12-ந்தேதி) முதல் வருகிற 14-ந்தேதி வரை சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கும். பிற இடங்களில் இருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிட்டுள்ளது.

சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திரு வண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) 320 பஸ்களும், வருகிற 13-ந்தேதி 310 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) 55 பஸ்களும், வருகிற 13-ந்தேதி 55 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கும் 100 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மாதவரத்தில் இருந்து நாளை (12-ந்தேதி) மற்றும் 13-ந்தேதி ஆகிய நாட்களில் 20 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், இந்த வார இறுதியில் நாளை (12-ந்தேதி) 7,838 பயணிகளும், 13-ந்தேதி 3,573 பயணிகளும், 14-ந்தேதி 8,323 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ள தால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் www.tnstc.in மற்றும் செல்போன் செயலி மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம்.

இந்த சிறப்பு பஸ் இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பஸ் நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.